/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கேளம்பாக்கம் - -வண்டலுார் சாலை ஆறு வழியாக மாற்ற எதிர்பார்ப்பு
/
கேளம்பாக்கம் - -வண்டலுார் சாலை ஆறு வழியாக மாற்ற எதிர்பார்ப்பு
கேளம்பாக்கம் - -வண்டலுார் சாலை ஆறு வழியாக மாற்ற எதிர்பார்ப்பு
கேளம்பாக்கம் - -வண்டலுார் சாலை ஆறு வழியாக மாற்ற எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 16, 2024 11:38 PM

திருப்போரூர்:கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலை, 17 கி.மீ., நீளம் உடையது. இரு பகுதிகளுக்கிடையே புதுப்பாக்கம், மாம்பாக்கம், மேலக்கோட்டையூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
கடந்த 1998ல், இச்சாலையில் போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்ததன் காரணமாக, இருவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அரசு, தனியார் கல்லுாரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை இப்பகுதியில் புதிதாக ஏற்பட்டன.அதன்பின், சில ஆண்டுகளில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்ந்தது. பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பல இடங்களில் சிறுபாலம் மற்றும் மீடியன் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், சாலைக்கு பெருமை சேர்க்கும் வகையில், இப்பகுதி கல்லுாரி மற்றும் தொழிற்சாலை நிறுவனத்தினர், மீடியன் பகுதியில், பூச்செடிகள் வளர்த்து பராமரிக்கின்றனர்.
ஓ.எம்.ஆர்., - ஜி.எஸ்.டி., சாலையை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகளில், மிக முக்கியமானதாக இருப்பதால், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய மனைப்பிரிவுகளும் அதிகரித்து வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகரிப்பால், தற்போது உள்ள நான்கு வழிச்சாலை போதுமானதாக இல்லை. வாகனங்கள் செல்லும்போது வழிவிட முடியாத நிலை உள்ளது. அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகின்றன.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலையை ஆறுவழியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

