/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருடிய நகைகளுடன் மாயம் ஆந்திராவில் திருடன் கைது
/
திருடிய நகைகளுடன் மாயம் ஆந்திராவில் திருடன் கைது
ADDED : ஆக 05, 2024 12:39 AM

சென்னை:சென்னை மணலி, விமலாபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் நாராயணன், 43; தனியார் நிறுவன ஊழியர். இவர், தன் இளைய மகள் அவந்திகா, 4, பிறந்த நாளை கொண்டாட, 27ம் தேதி குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார்.
பின், 31ம் தேதி இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள், 30,000 ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது.
மணலி போலீசார் விசாரித்தனர்.
இதில், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜீ என்ற மஸ்தான், 24, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
ராஜீயின் மொபைல் போன் எண்ணின் சிக்னலை கண்காணித்தபோது, அவர் ஆந்திரா மாநிலம் நெல்லுாரில் தப்பியோடியது தெரிய வந்தது. அங்கு வீடு ஒன்றில் ஒளிந்திருந்த ராஜியை, நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 22 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்:
மணலியில் உள்ள நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, வீடு திரும்ப முயற்சித்தேன். அப்போது, பூட்டிய வீட்டினுள் புகுந்து, மொபைல் போன் ஏதும் கிடைக்குமா என, தேடி பார்த்தேன்.
அங்கு பீரோவிலேயே சாவி இருந்தது. அதில் இருந்த நகைகளை பார்த்தபோது ஆசை வந்து விட்டது. திருடிக் கொண்டு சென்று விட்டேன். 25 சவரன் நகைகள் இருந்தன.
இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணைக்கு பின், அவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.