/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதார் சேவை மையத்தில் இருக்கை வசதி அமையுமா?
/
ஆதார் சேவை மையத்தில் இருக்கை வசதி அமையுமா?
ADDED : மே 14, 2024 10:26 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், பேரூராட்சி வளாகத்தில், தமிழ்நாடு அரசு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ், ஆதார் நிரந்தர பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, ஆதார் அட்டை புதிதாக பதிவு செய்தல், புதுப்பித்தல், செல்போன் எண் மாற்றுதல், புகைப்படம் மாற்றுதல், முகவரி திருத்தம் செய்தல் போன்ற சேவைகள் செய்யப்படுகின்றன.
இதனால், அச்சிறுபாக்கம் பேரூராட்சி மட்டுமல்லாது, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகின்றனர். நாள்தோறும், 30-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இதில், பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள், கர்ப்பிணியர், வயதான முதியோர் என, பலதரப்பட்ட மக்களும், ஆதார் மையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இங்கு, இருக்கை வசதிகள் அமைக்கப்படாததால், ஆதார் மையத்தின் வாசல் எதிரே, வெயிலில் வரிசையில் நிற்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, நிழற்கூரை அமைத்து, இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தர, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

