/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிடப்பில் 100 மீ., சாலை பணி வனத்துறை அனுமதியின்றி சிக்கல்
/
கிடப்பில் 100 மீ., சாலை பணி வனத்துறை அனுமதியின்றி சிக்கல்
கிடப்பில் 100 மீ., சாலை பணி வனத்துறை அனுமதியின்றி சிக்கல்
கிடப்பில் 100 மீ., சாலை பணி வனத்துறை அனுமதியின்றி சிக்கல்
ADDED : ஜன 03, 2025 01:48 AM

மறைமலைநகர்:சட்டமங்கலம் -- வடமேல்பாக்கம் சாலை, 1.2 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை சட்டமங்கலம், வடமேல்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையின் ஒரு பகுதி செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி எல்லையிலும், மற்றொரு பகுதி காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம் நாட்டரம்பட்டு ஊராட்சியிலும் உள்ளது.
இச்சாலையை பயன்படுத்தி கிராம மக்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, முக்கிய தேவைகளுக்காக அடிக்கடி சென்று வருகின்றனர்.
இந்த சாலை பல ஆண்டுகளாக சிதிலமடைந்து, வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாமல் அவதியடைந்தனர்.
கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, கடந்தாண்டு முதல்வரின் கிராம சாலைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 66.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சாலை அமைக்கும் பணி நடந்தது.
இந்த சாலையில் 100 மீட்டர் துாரம், இருபுறமும் வனப்பகுதி உள்ளதால், இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, குறிப்பிட்ட இடம் தவிர்த்து, மற்ற இடங்களில் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது இந்த பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
இந்த பகுதியில் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி உள்ளதால், சிதிலமடைந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
மேலும், அவசர காலங்களில் பயணம் செய்வது சவாலாக உள்ளது. எனவே, விடுபட்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்க, வனத்துறையுடன் பேசி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேற்கண்ட சாலை அமைக்க, குறிப்பிட்ட அந்த பகுதி குறித்து வனத்துறை இணையதளத்தில், முறையாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தால், வனத்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, அதன் பின் சாலை அமைக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பர்.
- வனத்துறை அதிகாரி.

