/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மிதவை உணவகம் இயக்க பகிங்ஹாமில் துார்வார ஆய்வு
/
மிதவை உணவகம் இயக்க பகிங்ஹாமில் துார்வார ஆய்வு
ADDED : ஜன 03, 2025 12:47 AM
மாமல்லபுரம், முட்டுக்காடு பகிங்ஹாம் கால்வாயில் உருவாக்கப்பட்டுள்ள மிதவை உணவக படகு இயக்கத்திற்காக, கால்வாயை துார் வார, நீராதார துறையினர் ஆய்வை துவக்கி உள்ளனர்.
சென்னை அடுத்த முட்டுக்காடு பகிங்ஹாம் கால்வாய் முகத்துவார பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ், படகு குழாம் இயங்குகிறது. கால்களில் இயக்குவது, மோட்டாரில் இயக்குவது உள்ளிட்ட படகுகளில், பயணியர் சவாரி பயணம் செல்கின்றனர். பயணியரை மேலும் ஈர்க்க கருதி, கால்வாயில் மிதவை உணவகம் இயக்கவும், சுற்றுலா வளர்ச்சி நிர்வாகம் முடிவெடுத்தது.
கேரள மாநில தனியார் நிறுவனத்தின், ஐந்து கோடி ரூபாய் பங்களிப்பில் செயல்படுத்த, ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அந்நிறுவனம், 125 அடி நீளம், 25 அடி அகலம் அளவில், நவீன குளிர்சாதன வசதி மிதவை உணவக படகை, கடந்த ஆண்டு உருவாக்கியது. ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் தாமதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, சுற்றுலா வளர்ச்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
மிதவை உணவகம், இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. பயணியர் படகை அணுக 'ஜெட்டி' தளம் அமைக்கப்பட்டது. ஆனால், உணவகம் நீரில் இயங்குவதற்கேற்ப, கால்வாயில் ஆழமின்றி சேறாக உள்ளது. அதை துார்வாரி ஆழப்படுத்த, நீராதார துறையிடம் வலியுறுத்தி உள்ளோம். அத்துறையினர், அப்பகுதி கால்வாயில் நீளம், துார்வார வேண்டிய ஆழம் உள்ளிட்டவை குறித்து, தற்போது ஆய்வை துவக்கி உள்ளனர். ஆய்வு முடிந்து துார்வாரும் பணிகள் முடிக்கப்பட்டதும், மிதவை உணவகம் இயக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

