/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய தொழிலாளி ஜே.சி.பி.,யால் தோண்டிய போது தலை துண்டான பரிதாபம்
/
பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய தொழிலாளி ஜே.சி.பி.,யால் தோண்டிய போது தலை துண்டான பரிதாபம்
பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய தொழிலாளி ஜே.சி.பி.,யால் தோண்டிய போது தலை துண்டான பரிதாபம்
பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய தொழிலாளி ஜே.சி.பி.,யால் தோண்டிய போது தலை துண்டான பரிதாபம்
ADDED : மார் 17, 2024 02:33 AM

தாம்பரம்:கிழக்கு தாம்பரத்தில், பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில், மண் சரிந்து சிக்கிய தொழிலாளியை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் தோண்டிய போது, தலை துண்டாகி இறந்தார்.
தாம்பரம் மாநகராட்சியில், விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஐந்தாவது மண்டலம், கிழக்கு தாம்பரம், ஆதி நகர் பகுதியில், வி.வி.வி., என்ற நிறுவனம், இப்பணியை செய்து வருகிறது.
நேற்று காலை, ஆதி நகர், காமராஜ் தெருவில், திட்டக்குடியை சேர்ந்த முருகானந்தம், 27, தென்காசியை சேர்ந்த சண்முக சுந்தரம், 49 ஆகிய இரண்டு ஊழியர்கள், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியோடு, சாலையில் நீளமாக, 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஜே.சி.பி.,யை விஜய் என்பவர் ஓட்டினார். மாலை 3:40 மணிக்கு, பள்ளத்தில் இறங்கி, குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
அப்போது, சண்முக சுந்தரம் சுதாரித்து மேலே ஏறினார். ஆனால், முருகானந்தம் மண் சரிவில் சிக்கிக்கொண்டார்.
பின், அவரை காப்பாற்ற முயன்றும், முடியவில்லை. முழுவதுமாக மண் சரிந்து விட்டதால், காப்பாற்றும் எண்ணத்தில், ஜே.சி.பி., இயந்திரத்தால் மண்ணை அள்ள முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக முருகானந்தத்தின் தலை துண்டாகி, தலை மட்டும் வெளியே வந்தது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து அலறினர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை நடத்தினர். தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மேற்பார்வையில், ஜே.சி.பி., மூலம் மண் அள்ளப்பட்டது. மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் மண்ணில் சிக்கிய முருகானந்தத்தின் தலையில்லா உடலை மீட்டனர். பின், தலை, உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மண் சரிந்து, தொழிலாளி உள்ளே சிக்கிக்கொண்டது தெரிந்தவுடன், உடனடியாக போலீஸ், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல், ஜே.சி.பி., மூலம் காப்பாற்ற முயன்றதே முருகானந்தத்தின் தலை துண்டானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சேலையூர் போலீசார் வழக்குப் பதிந்து, சண்முக சுந்தரம், விஜய் ஆகிய இருவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

