/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு வனத்தில் விடுவிப்பு
/
ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு வனத்தில் விடுவிப்பு
ADDED : மார் 08, 2024 01:25 AM

ஆவடி:சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுதாகர், 35; தனியார் நிறுவன ஊழியர். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு, ஸ்ரீராம் நகரில், இவருக்குச் சொந்தமான காலி மனை உள்ளது.
நேற்று முன்தினம்,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக, சுதாகர் அந்த இடத்தை சுத்தம் செய்தார். அப்போது, மனை ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த கட்டட கழிவில் இருந்து, கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று ஓடியது. அங்கிருந்த, மூன்றுக்கும் மேற்பட்ட பாம்புக் குட்டிகளும் சிதறி ஓடின.
அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுதாகரின் ஸ்கூட்டருக்கு அடியில், பாம்பு புகுந்தது. பயந்து போன சுதாகர், செங்குன்றம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர், ஸ்கூட்டரின் உதிரி பாகங்களை ஒவ்வொன்றாக அகற்றி, ஒரு மணி நேரம் போராடி, 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட பாம்பை, வனத்துறையினர் அறிவுறுத்தலின்படி, வெங்கல், சீத்தஞ்சேரி வனப்பகுதியில் விடுவித்தனர்.

