ADDED : ஜூலை 22, 2025 12:11 AM

பரங்கிமலை,
கொலை முயற்சி வழக்கில், பல மாதங்கள் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
பரங்கிமலை காவல் நிலையத்தில், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்த தமிழரசன், 34, சென்னை, கே.கே., நகரைச் சேர்ந்த தாமஸ், 49, ஆகியோர், ஜாமினில் வெளிவந்தனர்.
அவர்கள் மீதான வழக்கு, ஆலந்துார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் ஆஜராகாமல் இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து, கடந்த ஆண்டு நவ., மாதம் இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்த, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்நிலையில், பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் அவர்கள் இருவரையும் பிடித்தனர். விசாரணைக்குப் பின், இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.