/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூருக்கு கூடுதல் பஸ் தேவை
/
செய்யூருக்கு கூடுதல் பஸ் தேவை
ADDED : டிச 23, 2025 01:43 AM
செய்யூர்: செய்யூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வட்டாட்சியர் அலுவலகம், துணை பதிவாளர் அலுவலகம், நுாலகம், அஞ்சலகம், அரசு மருத்துவமனை, வங்கி போன்றவை செயல்பட்டு வருகின்றன.
இதனால் தினமும், நுாற்றுக்கணக்கான மக்கள் செய்யூருக்கு வந்து செல்கின்றனர்.
அச்சிறுபாக்கத்தில் இருந்து செய்யூர் வரை, தடம் எண் 'டி-19' அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த தடத்தில் ஏற்கனவே இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், போதிய பேருந்து வசதி இல்லாமல், மக்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும் சென்னை, புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பேருந்தில் வரும் மக்கள், எல்லையம்மன் கோவிலில் இறங்கி, ஷேர் ஆட்டோ முலமாக செய்யூர் வந்து செல்கின்றனர்.
ஷேர் ஆட்டோ இல்லாமல் பல நேரங்களில், பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால், நேர விரயம் ஆகிறது. காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், போதிய பேருந்துகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அச்சிறுபாக்கம் - செய்யூர் இடையே கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் விதமாக, தற்போது அச்சிறுபாக்கத்தில் இருந்து செய்யூர் வரை இயக்கப்படும் பேருந்தை, எல்லையம்மன் கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

