/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூலி தொழிலாளர்களை மையப்படுத்தி கஞ்சா விற்பனை...குறிவைப்பு: சந்தையாக மாறிவரும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம்
/
கூலி தொழிலாளர்களை மையப்படுத்தி கஞ்சா விற்பனை...குறிவைப்பு: சந்தையாக மாறிவரும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம்
கூலி தொழிலாளர்களை மையப்படுத்தி கஞ்சா விற்பனை...குறிவைப்பு: சந்தையாக மாறிவரும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம்
கூலி தொழிலாளர்களை மையப்படுத்தி கஞ்சா விற்பனை...குறிவைப்பு: சந்தையாக மாறிவரும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம்
ADDED : ஏப் 30, 2025 09:41 PM

கூடுவாஞ்சேரி:சென்னை நகரத்தை மையப்படுத்தி நடந்து வந்த கஞ்சா விற்பனை, தற்போது புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரியில், கூலித் தொழிலாளர்களை குறிவைத்து நகரத் துவங்கியிருப்பது, பகுதிவாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள, 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சி, 8.5 சதுர கி.மீ., பரப்பில் உள்ளது. இங்குள்ள 30 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சுற்றுப் பகுதியில் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
குறிப்பாக, கூடுவாஞ்சேரி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, இங்கு குடியேறுவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்பனை அதிகரித்து, கஞ்சா சந்தையாக மாறி வருகிறது.
கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, அடிக்கடி கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளிகளை குறிவைத்து, கஞ்சா வியாபாரம் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதனால், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள, 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதிலிருந்து எளிதில் மீள முடியாமல் நிரந்தர வாடிக்கையாளராக மாறுவதால், 'கஸ்டமர்' எண்ணிக்கை அதிகரிப்பு, குறைந்த முதலீடில் அதிக லாபம் உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த சமூக விரோத செயலில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து தண்டிக்க, தமிழக காவல் துறை பலகட்ட, 'ஆப்பரேஷன்' திட்டம் வகுத்தும், அவர்களுக்கு போக்கு காட்டி, நுாதன முறையில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது.
சென்னை நகரத்தை மையப்படுத்தி நடந்து வரும் கஞ்சா விற்பனை, இப்போது கூடுவாஞ்சேரி பகுதியிலும் களைகட்டத் துவங்கியிருப்பது, பகுதிவாசிகளிடம் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்., 19ம் தேதி, கூடுவாஞ்சேரி அடுத்த வண்டலுார் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன், 19, சம்பத்குமார், 23, ஆகிய இரு இளைஞர்களை, போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர்கள் கொலைக் குற்றவாளிகள் என தெரிந்தது.
பிப்., 21ல், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே விஸ்வநாதன், 32, என்ற வாலிபரிடம், 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மார்ச் 4ம் தேதி, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜிபன் சந்தரா டெப்நாத், 29, என்ற இளைஞர், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, 21 கிலோ கஞ்சாவுடன் போலீசாரிடம் சிக்கினார்.
ஏப்., 22ல், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தைச் சுற்றி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பெரம்பூர், செம்பியம் பகுதி, டீட்ஸ் கார்டன் ஏழாவது தெருவைச் சேர்ந்த பாலாஜி, 20, என்பவரிடம் 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஏப்., 27ம் தேதியன்று, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்த, பீஹாரைச் சேர்ந்த பிரசாந்த் குமார், 27, மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ராஜ் சோதி, 34, இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கண்ட அனைவரும், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளிகளை குறிவைத்தே, கஞ்சாவை கடத்தி வந்து விற்க முயன்றுள்ளது, போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது.
இவ்வாறு, சென்னை நகரத்தை மையப்படுத்தி நடந்து வந்த வந்த கஞ்சா விற்பனை, தற்போது புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரியை குறிவைத்து நகரத் துவங்கியிருப்பது, பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.