
கூவத்துார் நெடுஞ்சாலையில்
மண் அரிப்பால் பெரும் பள்ளம்
பவுஞ்சூர் அருகே சித்ரவாடி கிராமத்தில், மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில், கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் போது, மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
தினசரி, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சாலையில், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
ஆகையால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்ஆய்வு செய்து, சாலை ஓரத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.குமரேசன், செய்யூர்.
திருப்போரூரில் சுற்றித்திரியும்
நாய்களை பிடிக்க கோரிக்கை
திருப்போரூர் பேரூராட்சியில், மாடவீதி, கச்சேரி சந்து தெரு, சான்றோர் வீதி, புதுத் தெரு உள்ளிட்ட தெருக்களில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதிகளில், நாய்கள் சொரி பிடித்து, நோய்பரப்பும் நிலையில் சுற்றித் திரிகின்றன. குழந்தைகள் தெருவில் விளையாட முடியவில்லை.
மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை, சில நாய்கள் துரத்தித் துரத்திக் கடிக்கின்றன. எனவே, நகரவாசிகளின் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம் நகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்.
- எஸ்.வெங்கடேசன், திருப்போரூர்.
பைப்லைன் உடைந்து சேதம்
10 நாட்களாக வீணாகும் குடிநீர்
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, 13வது வார்டுக்குஉட்பட்ட நந்திவரம் அம்சா நகர் பகுதிவாசிகளுக்கு, பெருமாட்டுநல்லுாரில் இருந்து, பைப்லைன் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இங்கு உள்ள குடிநீர் பைப்லைன் உடைந்து, கடந்த 10 நாட்களுக்கு மேலாக, சாலையில் குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது.
இதுகுறித்து புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேதமடைந்த பைப்லைனை சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த,நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- எஸ்.மாணிக்கராஜ், நந்திவரம்.
குண்டும் குழியுமாக உள்ள
கலிவந்தப்பட்டு சாலை
மறைமலை நகர் நகராட்சி, 10வது வார்டு, கலிவந்தப்பட்டு -- கூடலுார் சாலையில், பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளது.
இரவு வேலை முடிந்து, இருசக்கர வாகனத்தில்செல்வோர், கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ப.ஹரிஹரன், மறைமலை நகர்.
பயனின்றி நிறுத்தப்பட்டுள்ள
வாகனங்கள் ஏலம் விடப்படுமா?
மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்,ஒன்றியக் குழு தலைவர் மற்றும் அதிகாரிகளுக்குவழங்கப்பட்ட இரண்டு கார்கள், பழுது காரணமாக, சில மாதங்களாக பயனின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்கள்,வெயில் மற்றும் மழை காரணமாக, துருப்பிடித்துமுற்றிலும் வீணாகி வருகின்றன.
எனவே, வாகனங்களை பழுது நீக்கி,மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது பொது ஏலம் விட வேண்டும். பொது ஏலம் விட்டு கிடைக்கும் பணத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
- ரா.மகேஷ்குமார், மதுராந்தகம்

