
குண்டும் குழியுமான சாலை இருங்குன்றப்பள்ளியில் ஆபத்து
செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி ஜி.எஸ்.டி., சாலை மேம்பாலத்தின் கீழே, சாலையில் தார் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து, அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த பகுதியில், சாலையை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.ஜனார்த்தனம், செங்கல்பட்டு.
செங்கை பயணியர் நிழற்குடையில்
இருக்கைகள் அமைக்கப்படுமா?
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், பயணியர் நிழற்குடை உள்ளது. இங்கு, பல்வேறு தேவைகளுக்காக வரும் பெண்கள், முதியவர்கள், நீண்ட நேரம் பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் இருக்கை வசதி அமைக்கப்படாததால், சர்க்கரை நோயாளிகள், முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் தலையிட்டு, இருக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எல்.தாமரைச்செல்வி, செங்கல்பட்டு.
அரசு அலுவலக வளாக சுவர்களில்
சுவரொட்டிகளை அகற்ற கோரிக்கை
செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. இங்குள்ள அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுச்சுவரில், அரசியல் கட்சியினர், இறப்பு, பிறந்த நாள் போஸ்டர்கள் ஓட்டப்படுகின்றன.
இப்பகுதி சுவர்கள் அனைத்தும் போஸ்டர் ஓட்டும் இடமாக மாறி வருகிறது. அரசு அலுவலக சுவர்களில் போஸ்டர் ஓட்டுவதை தடை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி. தமிழ்செல்வன், செங்கல்பட்டு.
மத்திய அரசு மருத்துவ காப்பீடு
வழங்குவதில் காலதாமதம்
செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் முதியோர், மத்திய அரசின் மருத்துவ காப்பீடான பிரதம மந்திரி ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்சூரன்ஸ் கார்டு பெற, இ - சேவை வாயிலாக விண்ணப்பித்தும், இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இது குறித்து, இ - சேவை மையத்திலும் சரியான தகவல்கள் தெரிவிக்கவில்லை. எனவே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு, மத்திய அரசின் ஆயுள் காப்பீடு இன்சூரன்ஸ் சேவை கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.முஹம்மது இஸ்மாயில், ஆதனுார்.
நெற்குணம் சாலையில் பள்ளம்
சீரமைக்க வேண்டுகோள்
சித்தாமூர் அடுத்த நெற்குணம் கிராமத்தில், தொழுப்பேடு - சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
கடப்பேரி - நெற்குணம் இடையே, வயல்வெளிப் பகுதியில் சாலை நடுவே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இரவு நேரத்தில், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சு.கீர்த்திவாசன், சூணாம்பேடு.
சாலையில் உள்ள முட்செடிகளை
அகற்ற வலியுறுத்தல்
திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும், திருப்போரூர் - நெம்மேலி சாலை உள்ளது. பல்வேறு பகுதி மக்கள், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேம்பாலம் அருகே முட்செடிகள், காடு போல் வளர்ந்துள்ளன. இவை, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன. எனவே, அவற்றை அகற்ற, சம்பந்நதப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.விஜயகுமார், திருப்போரூர்.

