
கட்டுமான தொழிலாளர்கள்
காத்திருக்கும் இடம் மாற்றப்படுமா?
திருப்போரூரில், செங்கல்பட்டு சாலையில் உள்ள பி.டி.ஓ., அலுவலகம் எதிரே, வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்டுமான தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு, தினசரி காலை 8:00 மணி முதல் ஒரே நேரத்தில், 50க்கும் மேற்பட்டோர் அங்கு குவிகின்றனர்.
இதனால், அதன் வழியாக திருப்போரூர் ஆண்கள், மகளிர் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
எனவே, யாருக்கும் இடையூறு இல்லாத, அதே சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே, அவர்கள் காத்திருப்பதற்கான இடத்தை ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கே.கிருஷ்ணன், திருப்போரூர்.
---------------கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில்
உணவகம் அமைக்க வலியுறுத்தல்
கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில், பயணியரின் வசதிக்காக, ஏ.டி.எம்., மற்றும் உணவகங்கள் அமைக்க வேண்டும்.
புறநகர் பேருந்து நிலையம், அரசு அதிவிரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில், ஏ.டி.எம்., சேவையும் ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து மக்களும் வாங்கி பயனடையும் வகையில், குறைந்த சேவையில் தரமான உணவு வகைகளுக்கான உணவகங்கள் திறக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கா.சாந்தி, ராஜிவ்காந்தி நகர், ஊரப்பாக்கம்.
ஜல்லி பெயர்ந்த தேரடி தெரு
கடப்பாக்கம் மக்கள் அவதி
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்தில், காசிபாட்டை சாலையில் இருந்து செல்லும் தேரடித்தெரு, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
இந்த சேதமடைந்த சாலையில் செல்ல பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--- சு.ராஜன், கடப்பாக்கம்.
ஜி.எஸ்.டி., சாலையில் பள்ளங்கள்
சீரமைக்க வேண்டுகோள்
நந்திவரம்- -கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் எதிரில், ஜி.எஸ்.டி., சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளன.
அதேபோன்று, கூடுவாஞ்சேரி சிக்னல் அருகில், ஜி.எஸ்.டி., சாலையில் அநேக இடங்களில், பள்ளங்கள் உள்ளன.
இருசக்கர வாகனத்தில் செல்வோர், இந்த பள்ளங்களில் நிலை தடுமாறி, சாலையில் விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது.
எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- எஸ்.கிருஷ்ணன், ஊரப்பாக்கம்.
பிரியா நகர் பிரதான சாலை
சீரமைக்க எதிர்பார்ப்பு
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரியா நகர் பிரதான சாலை, சமீபத்தில் பெய்த மழையினால், மிகவும் சேதமாகி உள்ளது.
ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து, பிரியா நகர் பிரதான சாலை வழியாக, ரயில்வே ஐந்து கண் வராகி வரை, சாலை மிகவும் சேதமாகி உள்ளது.
போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ள இந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -எஸ்.சுப்பிரமணியன், ஊரப்பாக்கம்.
விபத்தில் சேதமான மின்மாற்றியை
அப்புறப்படுத்த வேண்டுகோள்
கூவத்துார் அருகே நெடுமரம் கிராமத்தில், கூவத்துார் வயல்வெளியில் உள்ள மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்யும் மின்மாற்றி, கடந்த 2022ம் ஆண்டு, அக்., 6ம் தேதி வெடித்து தீப்பற்றியது.
பின், பழுதடைந்த மின்மாற்றி அகற்றப்பட்டு, புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. பழுதடைந்த மின் மாற்றி, பல மாதங்களாக அப்புறப்படுத்தப்படாமல் அதே இடத்தில் உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்த மின்மாற்றியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ஏ.தினேஷ்குமார், பவுஞ்சூர்.