ADDED : பிப் 26, 2024 10:30 PM

ஊரப்பாக்கம் கழிவுநீர் கால்வாயில்
தேங்கிய குப்பை அகற்றப்படுமா?
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ரேவதிபுரம் ஆறாவது தெருவில், கழிவுநீர் கால்வாயில் குப்பை தேக்கமடைந்து, நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது.
இது குறித்து, ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவருக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கவும், தேங்கியுள்ள குப்பையை அகற்றவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.சொக்கலிங்கம், ஊரப்பாக்கம்.
ஊனமாஞ்சேரி - செங்கல்பட்டு
பேருந்து இயக்க வேண்டுகோள்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு செல்ல மாநகரப் பேருந்து வசதி இல்லை. அதனால், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஊரப்பாக்கம் போன்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் அடைகின்றனர்.
இங்கிருந்து பள்ளி செல்லும் மாணவ -- மாணவியர், வேங்கடமங்கலம் பிரதான சாலை சென்று, அங்கிருந்து வண்டலுார் வரை ஒரு பேருந்தும், வண்டலுாரில் இருந்து செங்கல்பட்டுக்கு மற்றொரு பேருந்தும் என, மாறி செல்கின்றனர்.
எனவே, ஊனமாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டுக்கு பேருந்து இயக்கினால், பள்ளி சென்று வரும் மாணவ - -மாணவியருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எஸ்.சண்முக பிரியா, பிளஸ் 1 மாணவி, ஊனமாஞ்சேரி.
தானியங்கி சிக்னல் அமைக்க
காயரம்பேடில் எதிர்பார்ப்பு
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் கூட்டு சாலையில் இருந்து, திருப்போரூர் செல்லும் நெல்லிக்குப்பம் சாலை பிரிகிறது.
காயரம்பேடு அம்பேத்கர் சிலை அருகில் உள்ள சந்திப்பில் சிக்னல் அமைக்கப்படாததால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, அம்பேத்கர் சிலை அருகில் தானியங்கி சிக்னல் அமைத்து, வாகன ஓட்டிகள் சீராக சென்று வரவும், தொடர் விபத்துகள் நடப்பதை தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, சிக்னல் அமைக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கயல்விழி, காயரம்பேடு.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
பனங்கொட்டூரில் விபத்து அச்சம்
மறைமலை நகர் நகராட்சி, திருக்கச்சூர் - மறைமலை நகர் சாலையில் அமைந்துள்ள பனங்கொட்டூர் கிராமத்தில், சாலை ஓரம் மின் வாரியம் சார்பில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அவற்றில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால், கனரக வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மின் கம்பிகளை மாற்றியமைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.மணிகண்டன், மறைமலை நகர்.
