/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டரை புதுச்சேரியில் சுகாதார நிலையம் கட்டுவதில்... இழுபறி:நிதி ஒதுக்கியும் இடம் தேர்வு செய்யாததால் அதிருப்தி
/
தண்டரை புதுச்சேரியில் சுகாதார நிலையம் கட்டுவதில்... இழுபறி:நிதி ஒதுக்கியும் இடம் தேர்வு செய்யாததால் அதிருப்தி
தண்டரை புதுச்சேரியில் சுகாதார நிலையம் கட்டுவதில்... இழுபறி:நிதி ஒதுக்கியும் இடம் தேர்வு செய்யாததால் அதிருப்தி
தண்டரை புதுச்சேரியில் சுகாதார நிலையம் கட்டுவதில்... இழுபறி:நிதி ஒதுக்கியும் இடம் தேர்வு செய்யாததால் அதிருப்தி
ADDED : ஜூலை 17, 2025 12:48 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டரை புதுச்சேரி ஊராட்சியில், துணை சுகாதார நிலைய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இதன் காரணமாக கட்டுமான பணிகள் துவக்கப்படாததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, 59 ஊராட்சிகள் உள்ளன.
1.50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
மக்கள் தொகையின் அடிப்படையில், அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் எல்.எண்டத்துார், ஒரத்தி, ராமாபுரம் ஊராட்சிகளில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கிராமப் பகுதிகளில் இருந்து அச்சிறுபாக்கத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் வருவதை தவிர்க்கும் வகையில், இரண்டு முதல் மூன்று ஊராட்சிகளுக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்ற விகிதத்தில், அச்சிறுபாக்கம்ஒன்றியத்துக்கு உட்பட்ட 59 ஊராட்சிகளில், 27 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
வாடகை கட்டடம்
இதில் வெங்கடேசபுரம், வேடந்தாங்கல், பாப்பநல்லுார், தீட்டாளம், பெரும்பாக்கம், சிறுபேர்பாண்டி ஊராட்சிகளில் மட்டும், துணை சுகாதார நிலையங்கள் சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன.
மற்ற, 18க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களும், ஊராட்சிகளில் உள்ள இ - சேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், நுாலக கட்டடம், மகளிர் குழு கட்டடம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன.
சொந்த கட்டடம் இல்லாததால் போதிய இட வசதி, கழிப்பறை வசதி மற்றும் காற்றோட்டம் இல்லாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
அதனால், சொந்த கட்டடம் இல்லாத துணை சுகாதார நிலையங்களுக்கு, புதிதாக கட்டடம் அமைக்க கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டரை புதுச்சேரி ஊராட்சியில், அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.
பின், இந்த கட்டடம் பழுதடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இதே ஊரில் பல்வேறு கட்டடங்களில் செயல்பட்டு, இறுதியாக தற்போது, இங்குள்ள மகளிர் குழு கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இதையடுத்து, இந்த துணை சுகாதார நிலையத்திற்கு, பழைய கட்டடம் செயல்பட்ட அரசு துவக்கப்பள்ளி வளாகத்திலேயே புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோர்ட்டில் வழக்கு
இதன் பின், 15வது நிதிக்குழு மானியம், 2024 -- 25ல், சுகாதார மானிய திட்டத்தின் கீழ், துணை சுகாதார நிலைய கட்டடம் கட்ட, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 41 லட்சம்ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
இந்நிலையில், பழைய துணை சுகாதார நிலையம் இருந்த கட்டடத்தை இடித்து, அதே பகுதியில் கட்டடம் கட்ட வேண்டும் என ஒரு தரப்பினரும், தண்டரைப்பேட்டை பகுதியில் அமைக்க வேண்டுமென மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இதனால், நிதி ஒதுக்கீடு செய்து, 6 மாதங்கள் ஆகியும், துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் துவக்கப்படாமல் உள்ளன.
எனவே கலெக்டர், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டரை புதுச்சேரி பகுதியில் ஆய்வு செய்து, துணை சுகாதார நிலையம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.