/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
176 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு வேடந்தாங்கலில் வளர்ச்சி பணி முடக்கம்
/
176 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு வேடந்தாங்கலில் வளர்ச்சி பணி முடக்கம்
176 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு வேடந்தாங்கலில் வளர்ச்சி பணி முடக்கம்
176 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு வேடந்தாங்கலில் வளர்ச்சி பணி முடக்கம்
ADDED : டிச 05, 2024 11:08 PM
மதுராந்தகம், மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் ஊராட்சியில், புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த ஊராட்சிக்கு, தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
ஆனால், வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த, அரசு புறம்போக்கு இடமில்லாத காரணத்தால், அனைத்து திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு வருகின்றன.
விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு தேவையான அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால், பணிகள் கிடப்பில் போடப்படுவதாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.
வேடந்தாங்கல் ஊராட்சிக்கு சமீபத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில், இரண்டு குளங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், குளம் வெட்ட இடமில்லை. தற்போது, வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகநல்லுாரில் 140 ஏக்கர், சித்தாத்துார் பகுதியில், 36 ஏக்கர் என, அரசுக்குச் சொந்தமான, 176 ஏக்கர் நிலங்கள், தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக, கிராமத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை அளவீடு செய்து, நிலத்தை மீட்டு பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மதுராந்தகம் வட்டாட்சியருக்கு, அச்சரப்பாக்கம் பி.டி.ஓ., அளித்துள்ள மனு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வேடந்தாங்கல் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணிக்குத் தேவையான இடங்கள், தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன.
ஆக்கிரமிப்பு நிலங்களை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி, ஊராட்சி நிர்வாகத்திடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன் கூறுகையில்,''வேடந்தாங்கல் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து உரிய ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.