மெய்த்தன்மை சான்று கேட்பு விவகாரத்தால் மக்கள் அதிருப்தி! திருப்போரூர் தாலுகாவில் மட்டும் இந்த நடைமுறை
மெய்த்தன்மை சான்று கேட்பு விவகாரத்தால் மக்கள் அதிருப்தி! திருப்போரூர் தாலுகாவில் மட்டும் இந்த நடைமுறை
UPDATED : செப் 15, 2026 09:52 PM
ADDED : செப் 15, 2026 09:14 PM

திருப்போரூர்:திருப்போரூர் தாலுக்காவில் நடைமுறையில் உள்ள கிராம நத்தம் அனைத்து பட்டாவிற்கும் மெய்த்தன்மை சான்று கேட்பதால்,
பத்திரப்பதிவு செய்வதிலும், வங்கியில் கடன் தொகை பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசு வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட பட்டாக்கள், உண்மையான பட்டாவா அல்லது போலியானவையா என, வட்டாட்சியர் மீண்டும் சான்று கேட்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் திருப்போரூர், பையனுார், மானாமதி, கரும்பாக்கம், நெல்லிக்குப்பம், கேளம்பாக்கம் ஆகிய ஆறு குறுவட்டங்கள் உள்ளன.
இந்த ஆறு குறுவட்டங்களில் உள்ள 85 கிராமங்களுக்கு, திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலுார், திருக்கழுக்குன்றம் ஆகிய சார்பாதிவாளர் அலுவலகங்களில் பத்திரபதிவு செய்யப்படுகிறது.
மேனுவலாக இருந்த கிராம நத்தம் பட்டாக்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், கணினி மயமாக்கப்பட்டன.
இந்த கணினி மயமாக்கப்பட்ட பட்டாவினை பொதுமக்கள் இணையதளத்தில் பார்த்து நகல் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், அந்த பட்டாவினை சட்டவிரோதமாக திருத்தவோ, மாற்றி அமைக்கவோ முடியாது.
இந்நிலையில், திருப்போரூர் வட்டத்தில் உள்ள கிராம நத்தம் பட்டாக்களை பத்திரப்பதிவு செய்ய, வட்டாட்சியரிடம் மெய்த்தன்மை சான்று பெற வேண்டும் என, அதிகாரிகள் தெரிவிப்பதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த மெய்த்தன்மை சான்று தொடர்பாக திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கேளம்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வரும் மக்களிடம், மெய்தன்மை கேட்டு திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படும் கடிதங்கள் ஒரு மாத காலத்திற்கு இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் அந்த கடிதம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் வந்த பிறகு மீண்டும், கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு செல்வதால் மக்கள் கடும் அவதி அடை கின்றனர்.
இவ்வாறு அரசு வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட பட்டாக்கள், வட்டாட்சியர் உண்மையான பட்டாவா அல்லது போலியானவையா என மீண்டும் சான்று கேட்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மொத்தம் 317 தாலுகாக்கள் உள்ளன. இதில், திருப்போரூர் தாலுக்காவில் மட்டும் மெய்த்தன்மை சான்று கேட்டு மக்களை சிரமப்பட வைக்கின்றனர்.
இதுதொடர்பான எந்தவித அரசாணையும் இன்றியும், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர்களிடம் ஒப்புதல் பெறாமலும், கிராம நத்தம் பட்டாக்களை பத்திரப்பதிவு செய்யும் போது, பட்டா உண்மையானது என வட்டாட்சியரிடம் மெய்த்தன்மையை வாங்க வேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒரு மெய்த்தமை சான்று பெற குறைந்தபட்சம் இரண்டு மாதமாகிறது.
இதற்காக மக்கள் கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அவர்களை சந்திக்க செல்ல பணம் விரயமும் அதிகமாகுகிறது.
இதுகுறித்து ஜமாபந்தியில் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது போலி பட்டாவை தடுக்க இந்த நடைமுறை என கூறியதுடன் அதனை சரிசெய்துவிடுவோம் எனவும் கூறினர். இதுவரை சரிசெ ய்யப்படவில்லை. சார்பதிவாளரிடம் கேட்டால் வட்டாட்சியர் சுற்றறிக்கை அனுப்பியதால் மெய்தன்மை சான்று கேட்கிறோம் என்று கூறுகின்றனர். மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
