/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.ஒரு கோடியில் வடிகால்வாய் பணி படூரில் 30 ஆண்டு அவலத்திற்கு தீர்வு
/
ரூ.ஒரு கோடியில் வடிகால்வாய் பணி படூரில் 30 ஆண்டு அவலத்திற்கு தீர்வு
ரூ.ஒரு கோடியில் வடிகால்வாய் பணி படூரில் 30 ஆண்டு அவலத்திற்கு தீர்வு
ரூ.ஒரு கோடியில் வடிகால்வாய் பணி படூரில் 30 ஆண்டு அவலத்திற்கு தீர்வு
ADDED : அக் 18, 2024 01:10 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய படூர் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் முழுமையாக விவசாயம் நடந்தது.
பின், சென்னை புறநகர் வளர்ச்சி காரணமாக, படூர் பகுதி முழுதும், ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லுாரிகள், வர்த்தக நிறுவனங்கள் உருவாகின.
மழைக்காலங்களில் படூர் கிராம ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் பொன்மார், வேங்கைவாசல், வேங்கடமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீரால், படூர் கிராமத்தில் மழை விட்டாலும் வெள்ளம் வடியாத நிலையே தொடரும்.
குறிப்பாக, அப்போது வேம்புலி அம்மன் கோவில் தெருவின் நடுவே கால்வாய் தோண்டப்பட்டு, வெள்ளநீர் வெளியேற்றப்படும். இதன் காரணமாக, இந்த தெருவில் வசிப்போர் தங்களின் வீடுகளுக்கு செல்வதற்கே சிரமப்படுவர்.
எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும்படி, ஊராட்சி நிர்வாகம் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சாலைகள் மற்றும் தெருக்கள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், கோடி ரூபாய் மதிப்பில், தெருவின் மத்தியில் பெரிய வடிகால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது, சில மாதங்களுக்கு முன், பெரிய வடிகால்வாய் அமைக்கும் பணி மட்டும் முடிவடைந்துள்ளது. இதனை, நேற்று முன்தினம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.
அடுத்த கட்ட பணியான சாலை அமைக்கும் பணி மற்றும் பெரிய வடிகால்வாயை பகிங்ஹாம் கால்வாயில் இணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
அதேபோல், கேளம்பாக்கம், ஏகாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை இயக்குனர் ராகுல்நாத், கலெக்டர் அருண்ராஜ், சப் - கலெக்டர் நாராயணசர்மா, கூடுதல் கலெக்டர் அனாமிகா படூர் ஊராட்சி தலைவர் தாரா உட்பட பலர் உடன் இருந்தனர்.