/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவளம், சிறுசேரி, மானாமதியில் பஸ் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
கோவளம், சிறுசேரி, மானாமதியில் பஸ் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
கோவளம், சிறுசேரி, மானாமதியில் பஸ் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
கோவளம், சிறுசேரி, மானாமதியில் பஸ் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 18, 2025 09:00 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கோவளம், சிறுசேரி, மானாமதி ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணியர் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை- - மாமல்லபுரம் இடையே கோவளம் ஊராட்சி உள்ளது.
இங்கு கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா ஆகியவை உள்ளன.
இதன் காரணமாக, அனைத்து தரப்பு மக்களும், சுற்றுலா பயணியரும் தினமும் கோவளத்திற்கு வந்து செல்கின்றனர்.
தாம்பரம், அடையாறு, தி.நகர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் கோவளத்திற்குஇயக்கப்படுகின்றன.
ஆனால், கோவளத்தில் பேருந்து நிலையம் இல்லாததால், மாநகர பேருந்துகள் அனைத்தும், சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன.
ஏற்கனவே வணிக பகுதி, தர்கா, மாமல்லபுரம் செல்லும் சாலை, கடற்கரை சாலை இருப்பதால் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதேபோல், கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரியில், 630 ஏக்கர் பரப்பில், சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதில், 65,000க்கும் மேற்பட்டோர், வெவ்வேறு நேரங்களில் பணிபுரிகின்றனர். மாநகர பேருந்துகள், ஓ.எம்.ஆர்., சாலை -- ஏகாட்டூர் பேருந்து நிறுத்தத்தில் நிற்கின்றன.
அங்கிருந்து, 1.5 கி.மீ., துாரம், ஐ.டி., ஊழியர்கள் நடந்து தான், நிறுவனங்களுக்குச் சென்றனர்.
இதனால், சிப்காட் வளாகத்திற்குள் ஊழியர்கள் வந்து செல்ல, தனி பேருந்து இயக்க வேண்டும் என, ஐ.டி., நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன.
இதையடுத்து, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், சிறுசேரி சிப்காட்டிற்கு, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 80 பேருந்துகள், 100 நடைகள் இயக்கப்படுகின்றன.
ஆனால், சிறுசேரி சிப்காட்டில் பேருந்து நிலையம் இல்லாததால், மாநகர பேருந்துகள் அனைத்தும், சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன.
இங்கு, போதிய அளவு பேருந்து நிலைய நிழற்கூரையுடன் இருக்கைகள், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
அதேபோல், திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, அரசு மேல்நிலைப் பள்ளி, காவல் நிலையம், கூட்டுறவு வங்கி உள்ளிட்டவை உள்ளன.
இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அதிக மாணவர்கள் வருகின்றனர்.
இங்கிருந்து அடையாறு, தாம்பரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு ஆகிய முக்கிய பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இவை, மக்களுக்கும் பெரிதும் பயன்படுகின்றன. இந்த பேருந்துகள் வந்து பயணியரை ஏற்றிச் செல்ல, பேருந்து நிலையம் இல்லை.
அங்குள்ள கூட்டுறவு வங்கி அருகே, சாலை ஓரத்தில் நின்று பயணியரை ஏற்றிச் செல்கின்றன. இதனால் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பயணியர் நிற்கவும், பேருந்து நிறுத்தவும் இடமில்லை. மழை, வெயில் காலங்களில், அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இங்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடி கவனம் செலுத்தி, மேற்கண்ட இப்பகுதிகளில் பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.