பெருங்குடி குப்பை கிடங்கில் தீ விபத்து; கண் எரிச்சல், சுவாச கோளாறால் அவதி
பெருங்குடி குப்பை கிடங்கில் தீ விபத்து; கண் எரிச்சல், சுவாச கோளாறால் அவதி
ADDED : ஜூன் 16, 2026 07:24 AM

துரைப்பாக்கம்: பெருங்குடி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், கண் எரிச்சல், சுவாச கோளாறால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். இரண்டு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
பெருங்குடி குப்பை கிடங்கு, 225 ஏக்கர் பரப்பளவு உடையது. இங்குள்ள குப்பை கழிவுகள், 'பயோ மைனிங்' முறையில் அகற்றும் பணி நடந்து வருகிறது.
நேற்று மாலை, குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயுடன், கரும்புகை பரவியதால் துரைப்பாக்கம், பெருங்குடி பகுதி மக்கள் கண் எரிச்சல், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டனர்.
வேளச்சேரி, திருவான்மியூர், மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குப்பை கழிவுகளின் அடி பகுதி வரை தீ பரவியதால், தீயை அணைக்கும் பணி பெரும் சவாலாக இருந்தது. இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ பரவாமல் இருக்க, 'பொக்லைன்' இயந்திரம் மூலம் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டது.
ரசாயன மாற்றம், கடுமையான வெப்பம் காரணமாக தீ விபத்து நடந்ததாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். அதேநேரம், மர்ம நபர்கள் யாராவது தீ வைத்துள்ளனரா என, துரைப்பாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
