/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுாரில் அடிக்கடி மின் தடை துாக்கமின்றி பகுதிவாசிகள் வேதனை
/
வண்டலுாரில் அடிக்கடி மின் தடை துாக்கமின்றி பகுதிவாசிகள் வேதனை
வண்டலுாரில் அடிக்கடி மின் தடை துாக்கமின்றி பகுதிவாசிகள் வேதனை
வண்டலுாரில் அடிக்கடி மின் தடை துாக்கமின்றி பகுதிவாசிகள் வேதனை
ADDED : ஜூலை 02, 2025 01:40 AM
வண்டலுார்:வண்டலுார், ஓட்டேரி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னையால், பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில் 15 வார்டுகளில், 232 தெருக்களில், 50,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
புதிதாக வீடு கட்டி குடியேறுவோர், தனியார் குடியிருப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் தொகையும் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.
இங்கு, ஓட்டேரி பகுதியில் கடந்த இரு ஆண்டுகளாக, அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
தவிர, குறைந்த மின்னழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால், வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுதாகி, பொருளாதார இழப்பையும் சந்திப்பதாக, பகுதிவாசிகள் புகார் எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:
வண்டலுாரில், தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, மின் வினியோக கட்டுமானங்கள் இல்லை.
இங்குள்ள ஓட்டேரி பகுதியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட, குறைந்த திறன் உள்ள மின்மாற்றிகளே இப்போதும் பயன்பாட்டில் உள்ளன.
இவை, தற்போதைய மின் வினியோகம் மற்றும் பகிர்மானத்திற்கு ஏற்புடையதாக இல்லை. தொடர்ந்து ஆறு மணி நேரம் இயங்கினாலே, இந்த மின் மாற்றிகள் பழுதாகி விடுகின்றன.
இதனால், தினமும் ஐந்து முறை மின் தடை, குறைந்த மின்னழுத்தம் என பிரச்னை ஏற்படுவதால், பகுதிவாசிகள் தவிக்கின்றனர்.
இரவு நேரத்தில் ஏற்படும் மின் தடையால், பள்ளி செல்லும் குழந்தைகள், முதியோர், நோயுற்றோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வாக, ஓட்டேரி பகுதியில் உள்ள திறன் குறைவான மின்மாற்றிகளை அகற்றி, தற்கால தேவைக்கு ஏற்ப, அதிக திறன் உள்ள மின்மாற்றிகளை அமைக்க, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.