/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஆடு திருடர்கள் சிக்கினர்
/
நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஆடு திருடர்கள் சிக்கினர்
நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஆடு திருடர்கள் சிக்கினர்
நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஆடு திருடர்கள் சிக்கினர்
ADDED : அக் 14, 2025 12:38 AM
சென்னை, குறுக்கே வந்த தெருநாயால் விபத்துக்குள்ளான வாலிபர்கள், ஆடு திருடர்கள் என தெரிய வர, பகுதிமக்கள் மடக்கிபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம், சூளைமேடில் அதிகாலையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
சூளைமேடு, காந்தி சாலையில் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு பைக்கில் வந்த வாலிபர்கள், தெருநாய் ஒன்று குறுக்கே வர நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் இருவரும் காயமடைந்தனர். பகுதிமக்கள், அவர்களை மீட்டு, தண்ணீர் கொடுத்து உதவியுள்ளனர்.
திடீரென வாலிபர்கள் இருவரும், தாங்கள் கொண்டுவந்திருந்த ஆட்டை துாக்கி கொண்டு ஓட்டம் பிடித்தனர். சந்தேகமடைந்த பகுதிமக்கள், இருவரையும் பிடித்து சூளைமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அமைந்தகரையைச் சேர்ந்தவர் ஹரிதாஸ், 19, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரஜான் குமார், 20, என்பதும், சூளைமேடு காந்தி சாலையில் லத்தீப், 52, என்பவரின் இறைச்சி கடையில் இருந்து, ஆடு திருடி வந்ததும் தெரிய வந்தது.
மேலும், இருசக்கர வாகனம் மற்றும் ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்த இவர்கள், கூட்டாளிகளான அரும்பாக்கம் தயா, எம்.எம்.டி.ஏ., காலனி சந்தோஷ், வடபழனி சரவணன் ஆகியோருடன் சேர்ந்து, மூன்று நாட்களுக்கு முன், தாம்பரத்தில் இருசக்கர வாகனத்தை திருடி உள்ளனர்.
அந்த வாகனத்தை பயன்படுத்தி, பிரஜான், ஹரிதாஸ் ஆகியோர் சூளைமேடு காந்தி சாலையில் லத்தீப்பின் இறைச்சி கடையில் கட்டி இருந்த ஆடுகளை, நேற்று இரவு 1:00 மணியளவில் திருடி உள்ளனர். அவற்றை, வடபழனி ஜெய் நகரில் உள்ள சரவணனிடம் ஒப்படைத்து உள்ளனர்.
பின்னர், தங்கள் கூட்டாளிகளான தயா மற்றும் சந்தோஷ் ஆகிய இரண்டு பேரையும், 'நீங்கள் எம்.எம்.டி.ஏ., காலனி சமூக நலக்கூடம் அருகே நில்லுங்கள்; நாங்கள் இரண்டு பேரும் மேலும் ஒரு ஆட்டை திருடி வருகிறோம். ஐந்து பேரும் சேர்ந்து மூன்று ஆடுகளையும் நல்ல விலைக்கு விற்றுவிடுவோம்' எனக் கூறியுள்ளனர். இரண்டாவது முறை ஆடு திருடி வரும்போது பொதுமக்களிடம் சிக்கியுள்ளனர்.
இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம், நள்ளிரவில் கலகலப்பை ஏற்படுத்தியது. மூன்று ஆடுகளையும் மீட்ட போலீசார், தலைமறைவாக உள்ள சரவணன், தயா, சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.