/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டில் பேனர்கள் அதிகரிப்பு கண்டும் காணாத அரசு அதிகாரிகள்
/
செங்கல்பட்டில் பேனர்கள் அதிகரிப்பு கண்டும் காணாத அரசு அதிகாரிகள்
செங்கல்பட்டில் பேனர்கள் அதிகரிப்பு கண்டும் காணாத அரசு அதிகாரிகள்
செங்கல்பட்டில் பேனர்கள் அதிகரிப்பு கண்டும் காணாத அரசு அதிகாரிகள்
ADDED : ஏப் 29, 2025 12:11 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் நெடுஞ்சாலை, பயணியர் நிழற்குடைகள் உள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வணிகர் தினத்தையொட்டி, மதுராந்தகம் பகுதியில் வரும் 5ம் தேதி மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடைபெறுவது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் முழுதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
அரசியல் கட்சிகளை விட, வணிகர் தினத்தையொட்டி ஏராளமான பேனர்களை வைத்துள்ளனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், பயணியர் நிழற்குடையை மறைத்து, விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர்.
இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், சாலையில் விபத்து பயத்துடன் நிற்க வேண்டியுள்ளது. இதேபோன்று, ராட்டிணங்கிணறு ரயில்வே மேம்பாலம் நுழைவாயில் பகுதியில், பெரிய அளவில் விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர்.
இவற்றை கண்காணிக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டும் காணாமல் உள்ளன. கடந்த சில மாதங்களாக, பேனர் கலாசாரம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலான விளம்பர பேனர்கள், பிளக்ஸ் பேனர்கள் அதிகரித்துள்ளன.
அரசில் கட்சிகள் மட்டுமின்றி, கட்சி பிரமுகர்களின் திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் உத்தரவை அலட்சியப்படுத்தி, அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விளம்பர பேனர்கள் வைத்து வருகின்றனர்.
எனவே, இதுபோன்ற பேனர்களை தடை செய்ய, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பெரிய விபத்துகள் நடப்பதற்குள், சாலைகள் மற்றும் பயணியர் நிழற்குடைகளை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் அகற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.