/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு சிற்ப கல்லுாரி மாணவ சேர்க்கை இணையவழி விண்ணப்ப பதிவு துவக்கம்
/
அரசு சிற்ப கல்லுாரி மாணவ சேர்க்கை இணையவழி விண்ணப்ப பதிவு துவக்கம்
அரசு சிற்ப கல்லுாரி மாணவ சேர்க்கை இணையவழி விண்ணப்ப பதிவு துவக்கம்
அரசு சிற்ப கல்லுாரி மாணவ சேர்க்கை இணையவழி விண்ணப்ப பதிவு துவக்கம்
ADDED : மே 16, 2025 09:47 PM
மாமல்லபுரம்:அரசு கட்டட, சிற்பக்கலை கல்லுாரியில், நான்காண்டு மரபுக் கலைகள் பயில விரும்புவோர், இணைய வழியில், ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கலை, பண்பாட்டுத் துறையின் கீழ், அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி, மாமல்லபுரத்தில் இயங்குகிறது.
மரபு கட்டடக் கலையில் தொழில்நுட்பவியல் இளையர் பி.டெக்., பட்டம் மற்றும் மரபு சிற்ப, ஓவிய, வண்ண கலைகளில் இளங்கவின்கலை இளையர் பி.எப்.ஏ., பட்டம் என, நான்கு ஆண்டு படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் சேர்க்கப்படுவர்.
2025 - 26ம் ஆண்டு, மாணவ சேர்க்கைக்கு, இணையவழி விண்ணப்ப பதிவு தற்போது துவக்கப்பட்டுள்ளது.
பி.டெக்., மரபு கட்டட கலை படிப்பிற்கு, பிளஸ் 2, கணித பாடத்துடன் தேர்ச்சி அல்லது இணையான பாடத்திட்ட தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கற்சிற்பம், சுதைச் சிற்பம், மரச் சிற்பம், உலோகச் சிற்பம் ஆகிய மரபு சிற்ப கலைகள் மற்றும் மரபு ஓவியம், வண்ணம் ஆகிய படிப்புகளுக்கு, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான பாடத்திட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் வயது, ஜூலை 1ம் தேதி, ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு, 26 வயதும், இதர வகுப்பினருக்கு, 23 வயதும் நிறைவு பெற்றிருக்கக் கூடாது.
விண்ணப்ப கட்டணம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, 50 ரூபாய். பிற பிரிவு வகுப்பினருக்கு, 100 ரூபாய். திருக்கழுக்குன்றம், பாரத ஸ்டேட் வங்கி கணக்கு எண், 11263357303ல், ஐ.எப்.எஸ்., SBIN0001191ல் இக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அதன் ரசீது, பிற சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றை கலை, பண்பாட்டுத் துறையின் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில், ஜூன் 30ம் தேதி வரை பதிவேற்றி விண்ணப்பம் பதியலாம்.
பிற விபரங்களுக்கு, 044-27442261 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.