/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாத்தாவுடன் வந்த பேத்தி லாரி மோதி உயிரிழப்பு
/
தாத்தாவுடன் வந்த பேத்தி லாரி மோதி உயிரிழப்பு
ADDED : மார் 11, 2024 11:33 PM

வானகரம்,- அரசு பேருந்து மற்றும் லாரி ஓட்டுனர்களின் ஓட்டுனரின் அஜாக்கிரதையால், சென்னையின் மூன்று இடங்களில் நடந்த விபத்தில், மூன்று பேர் உயிரிழந்தனர்.
சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் யேகவானி, 14. இவர், திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட்டு வரும், தங்களது வீட்டின் கட்டுமான பணிகளை குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் பார்வையிட்ட பின், தாத்தா ஆனந்தனுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வானகரம் அருகே சர்வீஸ் சாலையில் இருந்து, திடீரென திரும்பிய லாரி, ஆனந்தன் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது.
இதில், இருவரும் விழுந்ததில் யேகவானி பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட யேகவானி உயிரிழந்தார்.
இந்த விபத்தில், ஆனந்தன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து ஏற்படுத்தி தலைமறைவான லாரி ஓட்டுனரை, ஆவடி போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையைச் சேர்ந்தவர் செல்லம்மாள், 80. பூந்தமல்லி அடுத்த சித்துக்காட்டில் உள்ள தன் மகளை பார்க்க, நேற்று முன்தினம் பூந்தமல்லி பேருந்து நிலையம் சென்றார்.
அங்கிருந்து பிராட்வே செல்லும் அரசு பேருந்து, பேருந்து நிலையத்தின் குறுகிய நுழைவாயிலில் வேகமாக திரும்பியதால், அப்பகுதியை கடக்க முயன்ற செல்லம்மாள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செல்லம்மாள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று அதிகாலை செல்லம்மாள் இறந்தார்.
தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன், 42; டீ மாஸ்டர்.
இவர், வேலை முடிந்து, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, எழும்பூரில் இருந்து எண்ணுார் நோக்கி வந்த தடம் எண்: '28' மாநகர பேருந்து, கணேசன் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி விழுந்தவரின் மீது சக்கரங்கள் ஏறி இறங்கியதில், இடுப்பு, தொடை பகுதியில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது.
தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, கும்மிடிப்பூண்டி, நெல்வாயல் சாவடியைச் சேர்ந்த ஓட்டுனர் சம்பத்திடம், 48, விசாரிக்கின்றனர்.

