/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் அரசு கலை கல்லுாரிக்கு புது கட்டடம்; அடுத்த கல்வியாண்டுக்குள் கட்ட வலியுறுத்தல்
/
செய்யூர் அரசு கலை கல்லுாரிக்கு புது கட்டடம்; அடுத்த கல்வியாண்டுக்குள் கட்ட வலியுறுத்தல்
செய்யூர் அரசு கலை கல்லுாரிக்கு புது கட்டடம்; அடுத்த கல்வியாண்டுக்குள் கட்ட வலியுறுத்தல்
செய்யூர் அரசு கலை கல்லுாரிக்கு புது கட்டடம்; அடுத்த கல்வியாண்டுக்குள் கட்ட வலியுறுத்தல்
ADDED : டிச 29, 2025 07:27 AM
செய்யூர்: செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு புதிய கட்டடம் அமைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் உள்ள 127 கிராமங்களில், 2.75 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
உயர்கல்வி செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக, செய்யூர் பகுதி உள்ளது.
பல ஆண்டுகளாக செய்யூர் பகுதியில் அரசு கலைக் கல்லுாரி இல்லாததால், மாணவ -- மாணவியர் கல்லுாரிக்காக சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, திண்டிவனம் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
குறிப்பாக, செய்யூர் தாலுகாவில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வி படிக்க, செங்கல்பட்டு அரசு கலை கல்லுாரியை மட்டுமே நம்பி இருந்தனர்.
செய்யூர் பகுதியில் அரசு கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும் என, மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த மார்ச் 15ம் தேதி நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் செய்யூர், மானாமதுரை, ஆலந்துார் உள்ளிட்ட, தமிழகத்தில் 10 இடங்களில் புதிய கலைக்கல்லுாரிகள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
கல்லுாரிக்குச் சொந்தமாக தனி கட்டடம் அமைக்கும் வரை, கல்லுாரி தற்காலிகமாக செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட முடிவு செய்யப்பட்டது.
இப்பள்ளியில் உள்ள, இரண்டு அடுக்குகளுடன் கூடிய ஒன்பது வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தில், கல்லுாரி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டு, 5 பாடப் பிரிவுகளின் கீழ் தற்போது, 230 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
செய்யூர் அரசு கலைக் கல்லுாரிக்கு புதிய கட்டடம் அமைக்க, செய்யூர் - மேல்மருவத்துார் மாநில நெடுஞ்சாலை அருகே உள்ள அரசுடைமையாக மாற்றப்பட்ட, 7.16 ஏக்கர் நிலம், உயர்கல்வித் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
ரூ. 18.5 கோடி அத்துடன், கலைக் கல்லுாரிக்கு கட்டடங்கள் அமைக்க, 18.5 கோடி ரூபாய் கேட்டு மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.
இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களின் முதல் பருவ தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் கல்வியாண்டு நிறைவடைய உள்ளது.
தற்காலிக பள்ளி கட்டடத்தில் உள்ள ஒன்பது அறைகளில், ஒரு அறை அலுவலகமாக செயல்படுகிறது. மீதமுள்ள எட்டு அறைகளில் வகுப்பறைகள் செயல்பட்டு வருகின்றன.
அடுத்த கல்வியாண்டு புதிதாக மாணவர் சேர்க்கை நடந்து வகுப்புகள் துவங்கப்பட்டால், புதிதாக சேர்க்கை பெரும் மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் அவதிப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், கல்லுாரி மாணவர்களுக்கு ஆய்வகங்கள் அமைக்க போதிய இட வசதி இல்லை.
தற்போது புதிய கட்டடங்கள் அமைக்க கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டால் கூட, கட்டி முடிக்க ஆறு மாதம் முதல் ஓராண்டு காலம் தேவைப்படும்.
எனவே, அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்கு முன், கல்லுாரிக்கு புதிய கட்டடங்கள் அமைத்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

