ADDED : மே 08, 2025 01:34 AM
செங்கல்பட்டு:கீரப்பாக்கத்தில், அடுக்கு மாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணையை, 100 பயனாளிகளுக்கு, அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் குறை தீர்க்கும் கூட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
இந்த முகாமில் குடிநீர், சாலை வசதி, இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்ல வீடு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 345 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கீரப்பாக்கம் கிராமத்தில், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக, 212 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 25 'பிளாக்'குகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இதில், 100 பயனாளிகளுக்கு, அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். மேலும், கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் முடியலங்காரம் செய்வதற்கும், தையல் இயந்திரம் வாங்கி தொழில் செய்யவும், மாவட்ட தொழில் மையம் சார்பில், 10 பயனாளிகளுக்கு 3.27 லட்சம் ரூபாய் மதிப்பிலான மானிய தொகைக்கான ஆணையை, அமைச்சர் வழங்கினார்.
இதில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.