/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கேளம்பாக்கம் -- வண்டலுார் சாலை ஆறு வழியாக தரம் உயர்த்துவது அவசியம்
/
கேளம்பாக்கம் -- வண்டலுார் சாலை ஆறு வழியாக தரம் உயர்த்துவது அவசியம்
கேளம்பாக்கம் -- வண்டலுார் சாலை ஆறு வழியாக தரம் உயர்த்துவது அவசியம்
கேளம்பாக்கம் -- வண்டலுார் சாலை ஆறு வழியாக தரம் உயர்த்துவது அவசியம்
ADDED : ஜூன் 30, 2025 11:27 PM

திருப்போரூர், கேளம்பாக்கம் - - வண்டலுார் சாலை, 17 கி.மீ., துாரம் கொண்டது. இவ்விரு பகுதிகளுக்கிடையே புதுப்பாக்கம், மாம்பாக்கம், மேலக்கோட்டையூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.
கடந்த 1998ல், இச்சாலையில் போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்ததன் காரணமாக, இருவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசு, தனியார் கல்லுாரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், இந்த பகுதியில் ஏற்பட்டன.
பின், ஐந்தாண்டுகளில் இச்சாலை, நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, தேவையான இடங்களில் சிறுபாலம், மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், சாலைக்கு பெருமை சேர்க்கும் வகையில், இப்பகுதி கல்லுாரி மற்றும் தொழிற்சாலை நிறுவனத்தினர், சாலையின் மையத்தடுப்பு பகுதியில், பூச்செடிகள் வளர்த்து பராமரிக்கின்றனர்.
தற்போது மாநில நெடுஞ்சாலைகளில், மிக முக்கியமான சாலைகளில் ஒன்றாக, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலை உள்ளது. நாளுக்கு நாள் ஏராளமான வாகனங்கள் இச்சாலையில் செல்கின்றன.
பிரதான ஓ.எம்.ஆர்., சாலை, ஜி.எஸ்.டி., சாலைகளை இணைப்பதுடன், இச்சாலைக்கு இடையே உள்ள பல்வேறு ஊர்களின் வழியாகச் செல்லும் முக்கிய சாலைகளும் இணைகின்றன.
வாகன போக்குவரத்து அதிகரிப்பிற்கு ஏற்ப, தற்போதுள்ள நான்கு வழிச்சாலை போதுமானதாக இல்லை. ஓ.எம்.ஆர்., சாலை, ஜி.எஸ்.டி., சாலைகளில் செல்லும் அளவிற்கு இதில் வாகனங்கள் செல்கின்றன.
இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. மேலும், இரவு நேரத்தில் மின் விளக்குகள் இல்லாத சாலையாக உள்ளதாலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக புதுப்பாக்கம், சோனலுார், மாம்பாக்கம், கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர் சாலை சந்திப்புகளில் வாகனங்கள் திரும்பி செல்லும் போதும், குறுக்கே கடந்து செல்லும் போதும் போக்குவரத்து நெரிசல்
ஏற்படுகிறது.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இச்சாலையை நான்கு வழிச்சாலையிலிருந்து, ஆறுவழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.