/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை
/
கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை
ADDED : செப் 05, 2025 02:07 AM

அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் அருகே தண்டலம் கிராமத்திலுள்ள கங்கையம்மன் கோவிலில், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது.
தண்டலம் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில், அய்யனார் மற்றும் சப்த கன்னியர் கோவிலில் திருப்பணிகள் நடந்தன.
இதையடுத்து, மஹா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, யாகசாலை அமைக்க பந்தக்கால் நடப்பட்டது.
நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கிராம தேவதை வழிபாடு, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, கோ பூஜை, நவக்கிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.
மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதற்கால யாக பூஜைகள், சிலைகள் பிரதிஷ்டை, கீத, தாள உபசாரம் நடந்தன.
நேற்று காலை 7:00 மணிக்கு, இரண்டாம் காலத்தில் மங்கல இசை, தம்பதிகள் சங்கல்பம், நாடி சந்தனம், மஹா பூர்ணாஹுதி, மஹா மூல மந்திர ஹோமம் நடந்தன.
காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, 9:45 மணியளவில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், கோவில் கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
காலை 10:00 மணிக்கு விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை நடந்து, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெறும்.