/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை பஸ் நிலைய திட்டம் அடிக்கல் நாட்டி முதல்வர் துவக்கம் 30 ஆண்டுகள் இழுபறிக்கு முடிவு
/
மாமல்லை பஸ் நிலைய திட்டம் அடிக்கல் நாட்டி முதல்வர் துவக்கம் 30 ஆண்டுகள் இழுபறிக்கு முடிவு
மாமல்லை பஸ் நிலைய திட்டம் அடிக்கல் நாட்டி முதல்வர் துவக்கம் 30 ஆண்டுகள் இழுபறிக்கு முடிவு
மாமல்லை பஸ் நிலைய திட்டம் அடிக்கல் நாட்டி முதல்வர் துவக்கம் 30 ஆண்டுகள் இழுபறிக்கு முடிவு
ADDED : பிப் 27, 2024 09:52 PM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், ஸ்தலசயன பெருமாள் கோவிலின் முன்புறம் உள்ள குறுகிய திறந்தவெளி பகுதியே, கடந்த 50 ஆண்டுகளாக பேருந்து நிலையமாக உள்ளது.
அரசு, மாநகர் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்துகள், இங்கிருந்து பிற இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.
வாகனங்கள் முடக்கம்
அவற்றை நிறுத்துவதற்கேற்ப விசாலமான இடவசதியின்றி நெருக்கடியாக உள்ளது. பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், திறந்தவெளி வெயிலிலும், மழையிலும் காத்திருந்து அவதிக்குள்ளாகின்றனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை.
அப்பகுதி, பிரதான சாலைகள் இணையும் சந்திப்பாகவும் உள்ளது. பேருந்தை நிறுத்தவும், சாலையிலிருந்து திரும்பும்போதும், மீண்டும் வெளியேற முயற்சிக்கும்போதும், பிரதான சாலையில் செல்லும் பிற வாகனங்கள் செல்ல இயலாமல் முடங்கி, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
தமிழக அரசு, வருங்கால சுற்றுலா வளர்ச்சி கருதி, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே, பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம், இத்திட்டத்தை செயல்படுத்த, கடந்த 1992ல் அறிவித்தது.
அதற்காக, திருக்கழுக்குன்றம் சாலை பகுதி, பகிங்ஹாம் கால்வாய் அருகில், 6.80 ஏக்கர் இடத்தை ஒதுக்கிய வருவாய்த்துறை, பல ஆண்டுகள் இழுபறிக்கு பின், குழுமத்திடம் ஒப்படைத்தது.
நிலைய இடமாற்றத்தால் வியாபாரம், தொழில் பாதிக்கும் என கருதிய சிலரின் முட்டுக்கட்டையால், திட்டமே முடங்கியது.
தொடர் தாமதம்
இதற்கிடையே, மத்திய பொதுப்பணித்துறை வாயிலாக செயல்படுத்த, குழுமம் முடிவெடுத்து, 2016ல் ஒப்பந்தம் அளித்தது. அத்துறையினர் ஆய்வு செய்து, 15 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த முடிவு எடுத்தனர்.
நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் சிலர், திட்டத்தை, 26 கோடி ரூபாய் மதிப்பிற்கேற்ப வடிவமைக்க வலியுறுத்தியதாக சர்ச்சை ஏற்பட்டது.
பின், 18 கோடி ரூபாய்க்கு குறைக்கப்பட்டு, கடந்த 2019ல், தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அந்நிறுவனம் மண் பரிசோதனை நடத்தியும், கட்டுமானப் பணிகள் துவக்கப்படாததால், மத்திய பொதுப்பணித்துறையும் திட்டத்தை கைவிட்டது.
பின், மாமல்லபுரம் குழுமம், சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், மாமல்லபுரம் பேருந்து நிலைய திட்டத்தை செயல்படுத்துவதாக, சி.எம்.டி.ஏ., அறிவித்தது.
சி.எம்.டி.ஏ., அமைச்சர் சேகர்பாபு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், இப்பகுதியில் உயரதிகாரிகளுடன் ஆய்வு செய்தும் தாமதமானது.
தொடர்ந்து, பொது மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பில் செயல்படுத்த, நிர்வாகம் முடிவெடுத்தது. கடந்த ஆண்டு, அமைச்சர் சேகர்பாபு, 50 கோடி ரூபாய் மதிப்பில் அமைப்பதாக, சட்டசபையில் அறிவித்தார்.
திட்ட மதிப்பு உயர்வு
பின், சி.எம்.டி.ஏ., நிர்வாகம், 67 கோடி ரூபாய் மதிப்பிற்கு இறுதி செய்தது. தற்போது, திட்ட மதிப்பு 90.50 கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, சப் - கலெக்டர் நாராயணசர்மா, பேரூராட்சி தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

