ADDED : ஜூன் 08, 2026 02:29 AM

கானத்துார், கரிகாட்டுக்குப்பம், முட்டுக்காடு பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை 7:30 மணியளவில் ஏற்பட்ட மின் தடை, நள்ளிரவு வரை நீடித்தது. ஆத்திரமடைந்த பகுதி மக்கள், இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கானத்துார் போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து, நள்ளிரவு 12:30 மணியளவில் மின் வினியோகம் சீரானது.
இந்நிலையில், அங்கு வந்திருந்த திருப்போரூர் - எம்.எல்.ஏ., விஜயராஜ், மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்களிடம் விளக்கமளித்து கொண்டு இருந்தார். அப்போது, மீண்டும் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை சமாதானப்படுத்திய எம்.எல்.ஏ., ஓரிரு மாதங்களில் மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்; இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
