/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவளத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
கோவளத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
கோவளத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
கோவளத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2025 11:20 PM
திருப்போரூர்,இ.சி.ஆர்., சாலையில் உள்ள கோவளத்தில், விபத்தில் சிக்குவோர் முதலுதவி சிகிச்சை பெற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை- - மாமல்லபுரம் இடையே கோவளம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அடங்கிய கோவளம், செம்மஞ்சேரி, குன்றுகாடு உள்ளிட்ட பகுதியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா, வணிக கடைகள், தங்கும் விடுதிகள் ஆகியவை உள்ளன. இதன் காரணமாக, அனைத்து தரப்பு மக்களும், சுற்றுலா பயணியரும் தினமும் கோவளத்திற்கு வந்து செல்கின்றனர்.
இங்கு, சென்னை கோயம்பேடு, தாம்பரம், அடையாறு, தி.நகர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இ.சி.ஆர்., சாலை, கோவளம் சுற்றி, முட்டுக்காடு, கானத்துார், திருவிடந்தை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
கோவளம் இ.சி.ஆர்., சாலை சந்திப்பில், மாமல்லபுரம், திருவான்மியூர், கேளம்பாக்கம் பகுதிக்கு செல்லும் முக்கிய சாலைகள் பிரிந்து செல்கின்றன.
இந்நிலையில், கோவளம் ஊராட்சி மக்கள், கோவளம் சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. தனியார் மருத்துவமனை தான் உள்ளது.
உடல்நல பிரச்னை ஏற்படும்போது அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால், கேளம்பாக்கம், திருப்போரூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
கர்ப்பிணியருக்கு தடுப்பூசி, பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் மருத்துவ ஆலோசனை உதவிகளுக்கும் கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
அதேபோல், கோவளம் கடற்கரை மற்றும் தங்கும் விடுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணியர் கடல் அலையில் சிக்குதல், தங்கும் விடுதி நீச்சல் குளத்தில் சிக்குதல் போன்ற விபத்தின்போது முதலுதவி சிகிச்சைக்கு அரசு மருத்துவமனை இல்லை.
இ.சி.ஆர்., சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. திடீரென விபத்துக்கள் ஏற்படும் போது அவசர சிகிச்சைக்கு செல்ல, அரசு மருத்துவமனை இல்லை.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அவரசர சிகிச்சை பிரிவு அவசியம் என, இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரி வருகின்றனர். எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

