அதிக பாரம் ஏற்றி வருவதாக மண் லாரிகள் சிறைபிடிப்பு
அதிக பாரம் ஏற்றி வருவதாக மண் லாரிகள் சிறைபிடிப்பு
ADDED : மார் 28, 2026 05:32 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஒழலுாரில் மண் ஏற்றிச் சென்ற லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் மண் குவாரி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து, 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் மண் தார்ப்பாய் மூடாமல் ஒழலுார், பீடி நகர் வழியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.
அளவுக்கு அதிகமான வேகத்தில் லாரிகள் செல்வதாகவும் அனுமதிக்கபட்ட அளவை விட கூடுதலாக மண் எடுக்கப்பட்டு வருவதாக கூறி ஒழலுார் கிராம மக்கள் நேற்று 50க்கும் மேற்பட்ட லாரிகளை மடக்கி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மணப்பாக்கம் - செங்கல்பட்டு சாலையில் லாரிகள் வரிசையாக நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் பொது மக்களிடம் பேச்சில் ஈடுபட்டு சமாதனப்படுத்தினர்.
ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
