/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேம்பாலம் கீழ் புது கடவுப்பாதை வாகன ஓட்டிகள் தினமும் தடுமாற்றம்
/
மேம்பாலம் கீழ் புது கடவுப்பாதை வாகன ஓட்டிகள் தினமும் தடுமாற்றம்
மேம்பாலம் கீழ் புது கடவுப்பாதை வாகன ஓட்டிகள் தினமும் தடுமாற்றம்
மேம்பாலம் கீழ் புது கடவுப்பாதை வாகன ஓட்டிகள் தினமும் தடுமாற்றம்
ADDED : ஜூன் 27, 2025 12:51 AM

சிங்கபெருமாள் கோவில்:செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக, சிங்கபெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்குச் சென்று வருகின்றன.
மேலும் ஆப்பூர், திருக்கச்சூர், கொளத்துார், தெள்ளிமேடு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், சிங்கபெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வர, இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 138.27 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு, ஒரகடம் மார்க்கத்தில் கடந்த பிப்ரவரியில் பாலம் திறக்கப்பட்டது.
செங்கல்பட்டு மார்க்கத்தில் பணிகள் நிறைவடைந்த நிலையில், மேம்பாலம் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் கீழே ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு மார்க்கத்தில் வாகனங்கள் கடந்து அணுகு சாலையில் செல்வது போல, கடவுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால், அணுகு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சாலையில் வரும் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள், இந்த பகுதியைக் கடக்க, புதிதாக கடவுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
அணுகு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, இந்த பகுதியில் திரும்பும் வாகனங்கள் தெரியாது. இதனால், அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடைபெற்று, வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
பெரும் விபத்து ஏற்படும் முன், இந்த கடவுப்பாதையை மூட போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.