ரயில் கடவுப்பாதைகளில் மேம்பாலம் அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கம்
ரயில் கடவுப்பாதைகளில் மேம்பாலம் அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கம்
ADDED : பிப் 26, 2024 11:37 PM

மறைமலை நகர் : நாடு முழுதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 553 ரயில் நிலையங்கள் மற்றும் 1,500 ரயில்வே மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவை, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நேற்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, 34.09 கோடி மதிப்பில், மறைமலை நகர் சாமியார் கேட் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதேபோல, 31.44 கோடி மதிப்பில், செட்டிப்புண்ணியம் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, பரனுார் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயணசர்மா, கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சோத்துப்பாக்கம்
சென்னை- - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்டத்தின் மூலமாக, செய்யூர்- - வந்தவாசி, சேத்துப்பட்டு - - போளூர் சாலை இருவழித்தடமாக மாற்றப்பட்டது.
ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், 603 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. 94 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இதனால், இந்த சாலையை அதிகமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
மதுராந்தகம் - - சோத்துப்பாக்கம் பகுதியில், ரயில்கள் கடப்பதால் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனை தவிர்க்கும் விதமாக, சோத்துப்பாக்கம் பகுதியில் அமைய உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று மேல்மருவத்துார் ரயில்வே நிலையத்தில் நடந்தது.
இதில், தென்னக ரயில்வே கோட்ட அதிகாரிகள், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், செய்யூர் வி.சி., எம்.எல்.ஏ., பாபு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
