/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : டிச 25, 2025 06:32 AM

சித்தாமூர்: பெரியகயப்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே பெரியகயப்பாக்கம் ஊராட்சியில் 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணறுகளில் இருந்து மின்மோட்டாரில் மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, நேரடியாக குழாய்களில் மக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
குழாய்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் சுத்தமாக இல்லை என்பதால், ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில்,பெரியகயப்பாக்கம் காலனி பகுதியில் மேல்நிலை தேக்கத் தொட்டி அருகே, 2017ம் ஆண்டு ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 7 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்த காரணத்தால், சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் பூட்டியே உள்ளது. இதனால் மக்கள் குழாய்களில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

