/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூவத்துாரில் வெட்டி படுகொலை
/
பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூவத்துாரில் வெட்டி படுகொலை
பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூவத்துாரில் வெட்டி படுகொலை
பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூவத்துாரில் வெட்டி படுகொலை
ADDED : ஜூன் 30, 2025 11:39 PM

கூவத்துார், கூவத்துார் அருகே, பெட்ரோல் பங்க் உரிமையாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக் கோரி, வியாபாரிகள் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டதால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூவத்துார் அடுத்த பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 42. இவர், காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலையில், பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார்.
வழக்கம் போல, நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் பெட்ரோல் பங்க்கை மூடிவிட்டு, தன் பைக்கில் வீட்டுக்குச் சென்றார்.
காத்தான்கடை அருகே பைக்கை வழிமறித்த மர்ம நபர்கள், அரிவாளால் மோகன்ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூவத்துார் போலீசார், படுகாயமடைந்த மோகன்ராஜை மீட்டு, ஆம்புலன்சில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே மோகன்ராஜ் உயிரிழந்தார்.
பின், பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த கூவத்துார் போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 9:00 மணியளவில், வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என, காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி., அறிவழகன், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி, கொலையாளிகள் விரைந்து கைது செய்யப்படுவர் என உறுதி அளித்தார்.
இதையடுத்து, வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கூவத்துார் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.