/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செம்பூண்டி கிளியாற்றில் அணைக்கட்டு 9 மாதங்களில் பணியை முடிக்க திட்டம்
/
செம்பூண்டி கிளியாற்றில் அணைக்கட்டு 9 மாதங்களில் பணியை முடிக்க திட்டம்
செம்பூண்டி கிளியாற்றில் அணைக்கட்டு 9 மாதங்களில் பணியை முடிக்க திட்டம்
செம்பூண்டி கிளியாற்றில் அணைக்கட்டு 9 மாதங்களில் பணியை முடிக்க திட்டம்
ADDED : பிப் 05, 2025 01:45 AM
மதுராந்தகம் செம்பூண்டியில், கிளியாற்றின் குறுக்கே அணை கட்டும் பணிக்கான பூமி பூஜை, நேற்று நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், செம்பூண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில், கிளியாறு செல்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாடி கிராமத்தில் துவங்கும் கிளியாற்றிலிருந்து, வடகிழக்கு பருவமழை மற்றும் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் தண்ணீர், செம்பூண்டி வழியாக மதுராந்தகம் ஏரிக்குச் செல்கிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், கிளியாற்றின் குறுக்கே மண்ணால் அணைக்கட்டு கட்டி, செம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைத்தனர்.
கிளியாற்றில் அதிகமாக தண்ணீர் சென்றால், இந்த மண் அணைக்கட்டு அடிக்கடி உடையும். அப்போது, கிராமவாசிகள் ஒன்று சேர்ந்து, அணைக்கட்டில் மணல் மூட்டைகளை அடுக்கி, உடைப்பை சீரமைத்து வந்தனர்.
இதனால், இப்பகுதியில் அணைக்கட்டு கட்ட வேண்டும் என, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனால், உடைப்பு ஏற்படும் போது, கிளியாற்றில் செல்லும் தண்ணீர், மதுராந்தகம் ஏரிக்குச் சென்று, கடலில் கலந்து வந்தது.
இதையடுத்து, பருவமழை காலங்களில் கிளியாற்றில் வரும் தண்ணீரை செம்பூண்டி ஏரிக்கு அனுப்பும் வகையில், அணைக்கட்டு கட்ட வேண்டுமென, ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.
இதை ஆய்வு செய்து, அரசுக்கு அனுப்பி வைக்க, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இதன்படி நீர்வளத் துறையினர் செம்பூண்டி கிளியாற்றில் கள ஆய்வு செய்து, செம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் அணைக்கட்டு கட்ட, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர்.
இதை பரிசீலித்து, செம்பூண்டி கிளியாற்றில் அணைக்கட்டு கட்ட, நபார்டு திட்டத்தில் 4.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.
அணைக்கட்டு கட்டுமான பணிக்கு 'டெண்டர்' விடப்பட்டு, ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் கட்டுமான பணிக்கான பூமி பூஜை, நேற்று முன்தினம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் தலைமையில், செம்பூண்டி கிளியாற்றங்கரையில் நடந்தது.
இதுகுறித்து, மதுராந்தகம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் நீள்முடியோன் கூறுகையில்,''
செம்பூண்டி கிளியாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை, 9 மாதங்களில் முடிக்க திட்டமிட்டு பணிகள் விரைந்து நடைபெறும்,'' என்றார்.
அணைக்கட்டு விபரம்
கிளியாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டி, செம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் வகையில், இந்த அணைக்கட்டு அமைகிறது. அணைக்கட்டு நீளம் 115 அடி, உயரம் 6 அடியாக அமைக்கப்படுகிறது.
இந்த அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு, 1,387 கன அடி நீர் வெளியேற்றப்படும்.
செம்பூண்டி, வைப்பனை, லாடக்கரணை, பசுவங்கரணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். 1,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மேல் பாசன வசதி பெறும்.