/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவிலில் புஷ்கரணி குளம் அசுத்தம்
/
சிங்கபெருமாள் கோவிலில் புஷ்கரணி குளம் அசுத்தம்
ADDED : அக் 12, 2024 11:13 PM

மறைமலைநகர்,:சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பழமையான அகோபிலவல்லி தாயார் சமேத பாடலாத்திரி நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவில் அருகே சுத்த தீர்த்த புஷ்கரணி குளம் உள்ளது. இதில், ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம் ஐந்து நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
உற்சவர் பிரகலாதவரதர், அலங்காரத்துடன் ஸ்ரீதேவி,- பூதேவியருடன் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வந்து உற்சவம் நடத்தப்படும்.
இந்த குளத்தில் உள்ள தண்ணீர், தற்போது மாசடைந்து, பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக தண்ணீரின் நிறம் மாறி காணப்படுகிறது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:
குளத்தில் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் குப்பை நிறைந்து உள்ளது. கடந்த 2ம் தேதி மாஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அப்போது, அவர்கள் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்த பூஜை பொருட்களை படிக்கட்டுகளில் வீசி சென்றதால், அதிகளவில் தண்ணீர் மாசடைந்து உள்ளது.
மேலும், குளக்கரையை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பை கழிவுகள், குளத்தை ஒட்டியுள்ள சாலைகளில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, இந்த குளத்தை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.