/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பால்கனி இடிந்து இறந்தவரின் உறவினர்கள் மறியல் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
/
பால்கனி இடிந்து இறந்தவரின் உறவினர்கள் மறியல் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பால்கனி இடிந்து இறந்தவரின் உறவினர்கள் மறியல் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பால்கனி இடிந்து இறந்தவரின் உறவினர்கள் மறியல் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ADDED : டிச 05, 2024 11:16 PM

சென்னை,
சீனிவாசபுரத்தில் பால்கனி இடிந்து விழுந்ததில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையையும் வழங்கக்கோரி, உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரதான சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சையது சிலான்.
இவரது மகன் சையது குலாம், 23; தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
தடுப்பு அமைப்பு
அப்போது, குடிசை மாற்று வாரிய குடியிருப்பின், மூன்றாவது தளத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த சையது குலாமை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சற்று நேரத்தில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் உறவினர்கள், அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில், லுாப் சாலையில் நேற்று காலை 8:40 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினர்.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆத்திரமடைந்து, லுாப் சாலை - சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில், மறியல் போராட்டத்தில் ஈடுபட ஓடினர். அவர்களை தடுப்பதற்காக, இரும்பிலான தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர். அவற்றை கீழே தள்ளவிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தை இயக்கிய ஓட்டுநரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கீழே தள்ளி தாக்கினர். மேலும், வாகனங்கள் செல்லாத வகையில், கற்களை சாலையில் போட்டு, கீழே அமர்ந்தும் கோஷமிட்டனர். வேறு வழியின்றி, வாகன போக்குவரத்தை மாற்றுப்பாதையில் போலீசார் திருப்பிவிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மயிலாப்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வேலு பேச்சு நடத்தினார். அப்போது, இறந்தவரின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
கோரிக்கை
இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு, மீண்டும் அதே இடத்தில் குடியிருப்பு கட்டி தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த எம்.எல்.ஏ., வேலு, “தற்போது இழப்பீடு தொகை, 5 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரிடம் பேசி அதை வாங்கித் தருகிறேன். தகுதிக்கேற்ப மாநகராட்சி அல்லது குடிசை மாற்று வாரியத்தில் ஒருவருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்கிறேன்.
“தற்போதுள்ள குடியிருப்பை இடித்துவிட்டு, புதிதாக கட்டி தருவதற்காக கணக்கெடுக்கும் பணி, வரும் திங்கட்கிழமை துவங்கும்,” என்றும் உறுதி அளித்தார்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால், சாந்தோம் நெடுஞ்சாலை, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலை, அடையாறு எல்.பி.சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.