/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டிராக்டர் ஏறி துாய்மை பணியாளர் பலி உறவினர்கள் திடீர் சாலை மறியல்
/
டிராக்டர் ஏறி துாய்மை பணியாளர் பலி உறவினர்கள் திடீர் சாலை மறியல்
டிராக்டர் ஏறி துாய்மை பணியாளர் பலி உறவினர்கள் திடீர் சாலை மறியல்
டிராக்டர் ஏறி துாய்மை பணியாளர் பலி உறவினர்கள் திடீர் சாலை மறியல்
ADDED : ஜூலை 23, 2025 01:52 AM

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி, 8வது வார்டு, புது தெருவைச் சேர்ந்தவர் எட்டி, 58. இவர், திருப்போரூர் பேரூராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, துாய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி மகாலட்சுமி. மகன், மகள் உள்ளனர். நேற்று காலை வழக்கம் போல், எட்டி பணிக்குச் சென்றார்.
குப்பை சேகரிக்க, ஓ.எம்.ஆர்., சாலை காலவாக்கம் பகுதியில், டிராக்டரில் ஓட்டுநர் அருகில் அமர்ந்து சென்ற போது, தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில், டிராக்டரின் பின் சக்கரம் எட்டி மீது ஏறி இறங்கியதில், படுகாயமடைந்து மயங்கினார். உடனே, சக துாய்மை பணியாளர்கள் அவரை, திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலின்படி வந்த திருப்போரூர் போலீசார், எட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில், உயிரிழந்த துாய்மை பணியாளர் எட்டியின் உறவினர்கள், டிராக்டர் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி, திருப்போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, ஓட்டுநர் ஜெகதீசன் என்பவரை போலீசார் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
அத்துடன், உரிய நிதி வழங்க கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரியும், எட்டியின் உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே ஓ.எம்.ஆர்., சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
திருப்போரூர் போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர், அவர்களிடம் பேச்சு நடத்தியதும், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால், ஓ.எம்.ஆர்., சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.