/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி இழுபறி
/
செங்கையில் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி இழுபறி
ADDED : செப் 08, 2025 12:42 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் திட்டத்தில், மறு சீரமைப்பு பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மந்தமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடித்து, வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளன. இதன் வழியாக, சென்னையில் இருந்து, தென்மாவட்டங்களுக்கு, விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. அரோக்கோணம்- காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு, மின்சார ரயில் சென்று வருகின்றன.
இங்கிருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிகள், உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு, தினமும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர். இந்நிலைய வளாகத்தில், டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் தனியாக உள்ளது. இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
எனவே, ரயில் நிலைய நடைமேடை பகுதியில், டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்துதர வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, ரயில் நிலையத்தை, மறு சீரமைப்பு பணி செய்ய, அம்ரித் பாரத் திட்டத்தில், 22.14 கோடி ரூபாயில் பணி செய்ய, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, 2023 ஜூலையில் துவங்கியது.
இப்பணிகளை, 150 நாட்களில், முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரருக்கு, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
ரயில் நிலைய வளாகத்தில், அலுவலக கட்டடப்பணி, வளாகம் சீரமைப்பு பணிகள் அனைத்தும், கடந்த 2024 ஜூலை மாதம் முடிக்க ஒப்பந்ததார்களுக்கு, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
ஆனால், பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழியாக ரயில் நிலையம் சென்றுவரும் பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, ரயில் பயணிகள் நலன்கருதி, பணிளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு, அறிவுறுத்தி உள்ளோம். 70 சதவீத பணிகள் நடந்துள்ளன.
டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.