/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவிலில் நடைமேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
/
சிங்கபெருமாள் கோவிலில் நடைமேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
சிங்கபெருமாள் கோவிலில் நடைமேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
சிங்கபெருமாள் கோவிலில் நடைமேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 18, 2025 02:19 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில் நடைமேம்பாலம் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி ---சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை.
அடிக்கடி விபத்து
இந்த சாலையில் பெருங்களத்துார்- --- செட்டி புண்ணியம் வரை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையை கடக்கும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.
எனவே இந்த பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில், சிங்கபெருமாள் கோவிலில், அனுமந்தபுரம் சாலை சந்திப்பு அருகில் சாலையின் குறுக்கே நடைமேம்பாலம் அமைக்கும் பணி நான்கு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
இந்த பள்ளத்தை சுற்றி சிமென்ட் கான்கிரீட் தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
பணிகள் நடைபெறுவதற்கான அறிவிப்பு பலகை மற்றும் இரவில் ஒளிரும் பட்டைகள் உள்ளிட்டவை இந்த பகுதியில் அமைக்கப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக, இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் வேகமாக வரும் புதிய வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு தனியாக அணுகு சாலை இல்லாததால் எதிர்திசையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.
கழிவு நீர்
தற்போது நடைமேம்பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் கழிவு நீர் தேங்கிய நிலையில் எந்த பணிகளும் நடைபெறாமல் உள்ளது.
பணிகளுக்கு தடையாக சில தனியார் நிறுவனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.