/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதர் மண்டிய சுடுகாட்டை சீரமைக்க கோரிக்கை
/
புதர் மண்டிய சுடுகாட்டை சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 18, 2025 02:08 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
கிராமத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் மற்றும் எரியூட்ட அனுமந்தபுரம் சாலையில் சுடுகாடு உள்ளது.
இந்த சுடுகாடு வளாகம் முழுதும் செடிகள் அடர்ந்து காணப்படுகின்றன. மேலும் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் உடல்களை அடக்கம் செய்யும் பொது மக்கள் அவதியடைகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
விபத்து, தற்கொலை செய்து உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதபரிசோதனை செய்த பின் அடக்கம் செய்ய இரவு நேரம் கடந்து விடுகிறது.
சுடுகாட்டில் மின் விளக்குகள் இல்லாததால் மதம் சார்ந்த சடங்குகள் செய்ய சிரமமாக உள்ளது. நீண்ட நாட்களாக விளக்குகள் அமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகிறோம். கிராம சபை கூட்டங்களிலும் மனு அளித்து உள்ளோம். இது வரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.