/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.130 கோடி புறநகர் பஸ் நிலையம் பணி மந்தம்
/
ரூ.130 கோடி புறநகர் பஸ் நிலையம் பணி மந்தம்
ADDED : நவ 05, 2025 01:57 AM

செங்கல்பட்டு:மலையடி வேண்பாக்கத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிகள், மந்தமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இந்தாண்டு இறுதிக்குள் பேருந்து நிலையம் திறக்கப்படுமா என, சந்தேகம் எழுந்து உள்ளது.
செங்கல்பட்டு நகரில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, புதிய பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவற்றை, நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என, பொதுமக்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, ஆலப்பாக்கம் ஊராட்சி, மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரிக்குச் சொந்தமான 9.95 ஏக்கர் நிலத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இப்பணி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'டெண்டர்' விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலைய பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் 2023 நவ., 15ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.
அதன் பின், பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வந்தன.
இப்பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சி.எம்.டி.ஏ., தலைவருமான சேகர்பாபு, கடந்த ஜூலை 3ம் தேதி ஆய்வு செய்தார்.
அப்போது, இந்தாண்டு இறுதிக்குள் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தற்போது, பேருந்து நிலையத்திற்கு கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற பணிகள் நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
எனவே, செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புதிய புறநகர் பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலைய பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால், அமைச்சர் அறிவித்த தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதைத் தவிர்க்க, பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் . -தணிகாசலம், செங்கல்பட்டு.

