/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகரில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு 'சீல்'
/
மறைமலை நகரில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு 'சீல்'
மறைமலை நகரில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு 'சீல்'
மறைமலை நகரில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு 'சீல்'
ADDED : பிப் 14, 2024 10:50 PM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, குடியிருப்புகள், வணிக கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளிட்டவை உள்ளன.
இவற்றில், பல தொழிற்சாலைகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி உள்ளிட்டவற்றை செலுத்தாததால், 27.34 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக, நகராட்சிக்கு அடிப்படை வசதி பணிகள் மேற்கொள்வது தாமதமானது.
அதனால், நகராட்சி கமிஷனர் சவுந்தரராஜன் தலைமையில், நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் இணைந்து, நகராட்சிக்கு வர வேண்டிய நடப்பாண்டு நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பணியில், கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் மூன்று தொழிற்சாலைகளுக்கு, நேற்று 'சீல்' வைத்தனர்.
காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை, கடந்த 2021 - 24ம் ஆண்டு வரை நிலுவைத் தொகையாக, 2 லட்சத்து 80 ஆயிரத்து 538 ரூபாய் வைத்துள்ளது.
அதேபோல், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை, கடந்த 2018 -- 24ம் ஆண்டு வரை, 1 லட்சத்து 21 ஆயிரத்து 612 ரூபாய் நிலுவை வைத்துள்ளது.
லீடர் பேஷன் என்ற நிறுவனம், கடந்த 2010 -- 24ம் ஆண்டு வரை, 3 லட்சத்து 99 ஆயிரத்து 572 ரூபாய் சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது.
நகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும், நிலுவைத் தொகையை செலுத்த காலம் தாழ்த்தி வந்ததால், நேற்று நகராட்சி அதிகாரிகள் இந்த நிறுவனங்களை மூடி 'சீல்' வைத்தனர்.
தொடர்ந்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது, அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

