/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் மயானக்கொள்ளை கோலாகலம்
/
செங்கையில் மயானக்கொள்ளை கோலாகலம்
ADDED : மார் 11, 2024 04:58 AM

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், மாசி அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டி, காளி வேடமணிந்து கோவிலில் இருந்து பாலாற்று பகுதியில் உள்ள சுடுகாடு வரை ஆடியபடி வந்தனர்.
மேலும், பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக தீ சட்டி எடுத்தல், முதுகில் அலகு குத்தி ஆட்டோ, டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களில் தொங்கியபடி வந்தனர். இதில், 1,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
அதேபோல மறைமலை நகர் அடுத்த கலிவந்தபட்டு கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விமரிசையாக நடைபெற்றது.
சூணாம்பேடு அருகே வில்லிப்பாக்கம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 8ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
அதன்பின், வள்ளாளக்கண்டன் கோட்டை அழித்தல், அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக, அம்மன் மயானம் புறப்பாடு நேற்று முன்தினம் நடந்தது.
மயானத்தில் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை படையலிட்டு வழிபட்டனர்.
மேலும், காய்கறிகள், பழங்கள், மலர்கள், நாணயங்களை சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல சூணாம்பேடு மற்றும் வேலுார் கிராமத்தில் மயானக்கொள்ளை திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டது.
மதுராந்தகம் அடுத்த மோச்சேரியில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது.
அதன்பின், மதியம் 1:00 மணியளவில், அங்காளம்மன் மயானம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. மோச்சேரி சாலையில் மயானக் கொல்லை விழா நடைபெற்றது.
கூவத்துாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு 112வது மயானக்கொள்ளை உற்சவம், நேற்று முன்தினம் நடந்தது.
இதை முன்னிட்டு, கடந்த 7ம் தேதி கிராம தேவதை செல்லியம்மனை வழிபட்டு, உற்சவம் துவக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, சிறப்பு அலங்காரத்தில் அங்காள அம்மன் மயானம் சென்று, மகிஷாசூரனை வதம் செய்து, மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.
தினமும் ஒரு சமூகத்தினர் சார்பில், வரும் 17ம் தேதி வரை இரவு 7:00 மணிக்கு உற்சவம் நடக்கிறது. 14ம் தேதி மாலை அம்மன் தேரில் வீதியுலா செல்கிறார்.

