/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகரில் பாதாள சாக்கடை பணிகள்...தாமதம்!:வனப்பகுதி, நீர்நிலையில் கழிவுநீர் கலந்து நாசம்
/
மறைமலைநகரில் பாதாள சாக்கடை பணிகள்...தாமதம்!:வனப்பகுதி, நீர்நிலையில் கழிவுநீர் கலந்து நாசம்
மறைமலைநகரில் பாதாள சாக்கடை பணிகள்...தாமதம்!:வனப்பகுதி, நீர்நிலையில் கழிவுநீர் கலந்து நாசம்
மறைமலைநகரில் பாதாள சாக்கடை பணிகள்...தாமதம்!:வனப்பகுதி, நீர்நிலையில் கழிவுநீர் கலந்து நாசம்
ADDED : பிப் 16, 2025 08:45 PM

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சியில், விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க 300.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில், பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் உள்ளன. இதன் காரணமாக மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி, 21 வார்டுகளைக் கொண்டது.
இங்கு நகர்ப்புற பகுதிகளில் உள்ள, 6 வார்டுகளில் மட்டுமே, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. விடுபட்ட மற்ற 15 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இதனால், அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தனியார் டேங்கர் லாரிகள் வாயிலாக எடுக்கப்பட்டு சாலை ஓரங்கள், காப்புக்காடுகள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டப்பட்டு வருகிறது.
பெரும்பாலான மழைநீர் கால்வாய்கள் கழிவுநீர் கால்வாய்களாக மாறி, சுற்றியுள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதன் காரணமாக, இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மறைமலைநகர் பகுதியில் கழிவுநீர் பிரச்னை, பல ஆண்டுகளாக தீராத பிரச்னையாக உள்ளது.
ஏற்கனவே, பாதாள சாக்கடை உள்ள பகுதிகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், நேரடியாக காட்டாங்கொளத்துார் ஏரி, நின்னைக்கரை ஏரிகளில் விடப்பட்டு வருகிறது.
இதனால், மறைமலைநகர் அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் சார்பில், மறைமலைநகர் நகராட்சி நிலப்பரப்புகளில் ஆய்வு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் பொத்தேரி, காட்டாங்கொளத்துார், சட்டமங்கலம், களிவந்தபட்டு, திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம், கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில், மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதையடுத்து, கருத்துரு உருவாக்கப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம், 300.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அறிவித்தது.
மேலும்,'டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவங்கிய இரண்டு ஆண்டுகளில், இந்த பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என, அப்போது கூறப்பட்டது.
ஆனால், நிதி ஒதுக்கீடு செய்து 20 மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
மறைமலைநகர் நகராட்சியில், கழிவுநீர் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, நகராட்சி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்கள் கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளன.
எனவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைமலைநகர் நகராட்சியைச் சுற்றி கோகுலாபுரம், கூடலுார், சட்டமங்கலம், திருக்கச்சூர் பகுதிகளில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் புதிதாக அதிகரித்து வருகின்றன. பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், கழிவுநீரால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, பாதாள சாக்கடை திட்ட பணிகளை, அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.
- ப.சீனிவாசன்,
மறைமலைநகர்.
பாதாள சாக்கடை அமைக்க, பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. மறைமலைநகர் நகராட்சியில், புதிதாக பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட உள்ள பகுதிகளில், அளவீடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பூமி பூஜை போடப்பட்டு, விரையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.
-ஹெச்.ரமேஷ்,
நகராட்சி கமிஷனர்,
மறைமலைநகர்.

