/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இ.சி.ஆரில் விபத்தில் சிக்குவோரை காப்பாற்ற கடப்பாக்கத்தில் தீவிர சிகிச்சை மையம் அவசியம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
/
இ.சி.ஆரில் விபத்தில் சிக்குவோரை காப்பாற்ற கடப்பாக்கத்தில் தீவிர சிகிச்சை மையம் அவசியம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
இ.சி.ஆரில் விபத்தில் சிக்குவோரை காப்பாற்ற கடப்பாக்கத்தில் தீவிர சிகிச்சை மையம் அவசியம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
இ.சி.ஆரில் விபத்தில் சிக்குவோரை காப்பாற்ற கடப்பாக்கத்தில் தீவிர சிகிச்சை மையம் அவசியம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 25, 2025 08:00 PM
செய்யூர்:கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் சிக்குவோரை காப்பாற்ற, கடப்பாக்கத்தில் தீவிர சிகிச்சை மையம் அவசியம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இது வேம்பனுார், ஆலம் பரைகுப்பம், விளம்பூர் போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமத்தினரின் பிரதான அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 30,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைகள் பெற்று வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை எனும் இ.சி.ஆர்., சாலையில், பல ஆண்டு களாக அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
விபத்தில் சிக்கி பலத்த காயமடைவோரை அவசர சிகிச்சைக்கு, 60 கி.மீ.,யில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும், 45 கி.மீ.,யில் உள்ள புதுச் சேரி மருத்துவமனைக்கும் செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது.
அருகே தீவிர சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் இல்லாததால், விபத்தில் சிக்கி படுகாயமடைவோரை நீண்ட துாரம் அழைத்துச் செல்லும் போது, வழியிலேயே அவர்கள் உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது.
தற்போது கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வரும் நிலையில் கடலுார், கும்பகோணம், சிதம்பரம் போன்ற கடலோர மாவட்டங் களுக்கு, அதிக அளவில் வாகனங்கள் செல்ல வாய்ப்புள்ளது. இதனால், மேலும் விபத்துகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க, கடப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீவிர சிகிச்சை மையம் அவசியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.