ADDED : அக் 06, 2025 11:36 PM
செங்கல்பட்டு செங்கல்பட்டில், கஞ்சா வழக்கில் ஆந்திர மாநில வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில், செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலை அருகில், மூங்கில் அம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக நடந்து வந்த இரண்டு நபர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இருவரையும் மடக்கி பிடித்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், இருவரும் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பாங்கிமதுரு, 24, அவரது நண்பரான தளபதி விஜயகுமார், 19, என தெரிந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.